க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் முதல்நாள் (04) காலை நடைபெற்ற பொருளியல் 1 வினாப்பத்திரம் பரீட்சார்த்திகளின் கைகளுக்கு சென்றது எப்படி?
உண்மையில் பரீட்சைத் திணைக்கள அறிவித்தலின்படி இப்பத்திரத்திலேயே பரீட்சார்த்திகள் விடையளித்திருக்க வேண்டும். இது தொடர்பாக அப்பத்திரத்திலே ஆரம்பத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் குறிப்பிட்ட நிலையத்தில் பத்திரத்திற்குப் பதிலாக கட்டமிடப்பட்ட வேறு பத்திரம் வழங்கப்பட்டு அதில் பரீட்சார்த்திகள் விடையளிக்குமாறு கோரப்பட்டதாம். அதனையே பரீட்சைத் திணைக்களத்திற்கு மதிப்பீட்டிற்காக அனுப்பியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டிருப்பு மகா வித்தியாலய பரீட்சை நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
இலங்கையில் வேறு எந்த பரீட்சை நிலையத்திலும் வினாப்பத்திரத்தை பரீட்சை முடிய வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.
அதே பத்திரத்தில் விடையளிக்குமாறு கோரி அதனையே மதிப்பீட்டிற்காக அனுப்பியுள்ளனர். ஆனால் பட்டிருப்பு பரீட்சைநிலைய மாணவர்களிடம் மாத்திரம் 1ஆம் வினாப்பத்திரம் உள்ளது.
இது விடயத்தில் பரீட்சைத் திணைக்களம் எவ்வாறு நடந்து கொள்ளுமோ தெரியாது.
ஆனால் இந்த பிரச்சினையில் பரீட்சார்த்திகளான மாணவர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாதென்பதே எமது கோரிக்கையாகும்.
இதுதொடர்பில் இலங்கை பரீட்சை ஆணையாளர் நாயகத்திடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர்சங்கம் முறைப்பாடொன்றைத் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா இம் முறைப்பாட்டை அறிவித்துள்ளார். பத்திரங்களின் பிரதிகளையும் அனுப்பி வைத்துள்ளார்.
இதுவிடயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரீட்சைக்குப் பொறுப்பான உத்தியோகத்தரும் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளருமான கணபதிப்பிள்ளை பாஸ்கரனிடம் கேட்ட போது தமக்கு அன்று பிற்பகல் 3மணியளவில் பட்டிருப்பு மகாவித்தியாலய பரீட்சை நிலையத்தில் இம்முறைகேடு இடம்பெற்றதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றதாகவும் இது தொடர்பில் பரீட்சை ஆணையாளரிடம் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்த பரீட்சை நிலையத்தில் பொருளியல் பாடம் எழுதிய பரீட்சார்த்திகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாதென்பதை மீளவும் வலியுறுத்துகின்றோம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
காரைதீவு நிருபர்-







0 facebook-blogger:
கருத்துரையிடுக