(சித்தாண்டி நிருபர்)
கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு பெற்ற முருகன் ஆலயங்களுள் ஒன்றாக திகழும் சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் பேராலயத்தின் மகோற்சவ கொடியேற்றமானது பெரும் திரளான அடியார்களின் அரோகரா கோசத்துடன் பக்தி பூர்வமாக நேற்று (1) உற்சவ கால பிரதம குர சிவாகம பிரினா சிவஸ்ரீ வாமகைலாசதாச குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமான சித்தாண்டி முருகப் பெருமானின் திருவிழாவானது 16 நாட்களைக் கொண்டமைந்தது. அந்தவகையில் ஆலயத்தின் உற்சவ திருவிழாக்களில் மயில்கட்டுத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த பக்திபூர்வமான திருவிழாவாக எதிர்வரும் 13 திகதி நடைபெறவுள்ளது. நாட்டில் எந்தவொரு ஆலயங்களிலும் இடம்பெறாத ஒரு திருவிழாவாக மயில்கட்டுத் திருவிழா சித்தாண்டி முருகப்பெருமான் ஆலயத்தில் இடம்பெறுவது முக்கிய சிறப்பு வாய்ந்தொன்றாகும். மயில் கட்டுத் திருவிழா காண்பதற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகைதருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தின் ஒவ்வொரு நாளுக்குரிய திருவிழாக்கள்; அனைத்தும் குடி மக்களினால் நடைபெறுவது வழமையாக இங்கு அமைந்துள்ளது. குடி மக்களின் திருவிழா உற்சவ காலங்களில் இரவுவேளையில் முருகப்பெருமான் உள் வீதி மற்றும் வெளி வீதி என்பன வலம் வந்து அடியவர்களுக்கு அருள்காட்சி கொடுப்பது மிகவும் சிறப்பானதாக இங்கு இடம்பெறுவதுவழமை.
ஆலயத்தின் உற்சவ காலங்களில் விசேட கூட்டு வழிபாடுகள், ஆன்மீக நற்சிந்தனைகள், பக்தி கலை நிகழ்வுகள் என்பன இடம்பெறவுள்ளது. ஆலயத்தின் இவ்வருட உற்சவ கால திருவிழாவுக்கான நிருவாக நடவடிக்கை அனைத்தையும் மாவட்ட செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயசிறி தலைமையில் செங்கலடி செயலகம் பொறுப்பேற்று நடாத்திவருகின்றமை கூட்டிக்காட்டத்தக்கது.
ஆலயத்தின் இறுதி நாளாகிய பிரணவ சரவணப் பொய்கை தீர்த்தமானது எதிர்வரும் 16ம் திகதி காலை சுமார் எட்டு மணியளவில் உதயன்மூலை சரணப் பொய்கை தீர்த்த குளத்தில் நடைபெறள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக