வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

பாரம்பரிய மருத்துவமுறைகளில் ஒன்றான “சுளுக்கு பார்த்தல் அல்லது உளுக்கு பார்த்தல்”

(தி.லலிதன்)

இற்றைக்கு இரண்டு தசாப்தங்களின் முன்னரான எனது கிராமத்தின் வைத்திய மரபுகளில் ஒன்றாக இந்த “சுளுக்கு பார்த்தல் அல்லது உளுக்கு பார்த்தல்” காணப்பட்டது.இந்த சுளுக்கு எனப்படுவது உடலின் யாதேனும் ஓர் பகுதியில் ஏற்படுகின்ற தசைக் கிழிவினை குறிக்கும்.இந்த தசைக் கிழிவானது தசை மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட ஒன்றாக இருந்தமையினால் மிகுந்த வலியை தரும் ஒன்றாய் இருந்தது.ஆனால் இந்த வகையான உபாதைகளுக்கு மக்கள் நோ நீக்கி மாத்திரைகளை உட்கொள்வதையோ அல்லது வைத்தியரிடம் செல்வதையோ தவிர்த்து இந்த சுளுக்கு பார்த்தலினையே தேர்வு செய்தனர்.

சுளுக்கு பார்த்தல் எனப்படுவது வேம்பெண்ணை அல்லது ஆமணக்கு எண்ணை போன்றவற்றினை கொண்டு சுளுக்கு ஏற்பட்ட இடத்தினை நீவி விடுதலாகும்.இதனை எல்லோராலும் செய்ய முடியாது.ஆனால் இதனை செய்வது கிராமத்தில் இருந்த பாரம்பரிய முறை வைத்தியர்களும் அல்லர்.மாறாக இதற்கான ஒரு சட்ட திட்டம் ஒன்றிருந்தது.அதாவது பிறக்கும் போது ‘கால் பக்கமாக அல்லது பிட்டத்தின் பக்கமாக” பிறந்த ஒருவரே இதனை மேற்கொள்ள முடியும்.
எங்கள் கிராமத்தில் இதற்கென பிரசித்தி பெற்ற ஒரு ‘அம்மா’ இருந்தார்.அவரிடம் மேற்சொன்ன எண்ணை வகையறாக்களுடன் சென்றால் அவர் இந்த சுளுக்கு பார்த்தலினை மேற்கொள்வார்.இதற்கு கூலியாக சிறிய தொகை பணம் ((இரண்டு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய்) அல்லது இரண்டு நாட்டு முட்டைகள் கொடுக்கப்படும்.
இதிலும் விசேடமானது காலில் ஏற்படும் சுளுக்குக்களுக்கான தீர்வாக அவர் காலினாலே மிதித்து சுளுக்கு பார்ப்பார்.அந்த எண்ணையின் மணமும் வலி நீங்கி போதலும் ஒரு அற்புதமான அனுபவமாய் இருக்கும்.நான் அம்மமாவுடன் போய் இரண்டு அல்லது மூன்று முறை “உளுக்கு பார்த்துள்ளேன்’.பாரம்பரியமிக்க இந்த மருத்துவ முறை இன்றைய நாளில் முழுமையாக எங்கள் பகுதிகளில் அற்றுப்போயுள்ளது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624950

Translate