சனி, 20 ஆகஸ்ட், 2016

மடிப்பிச்சை இடல்

(தி.லலிதன்)

மரபுகளும் பண்பாட்டு விழுமியங்களும் வேரோடிக்கிடக்கும் எங்கள் மண்ணின் இன்னொரு ஆன்மீக ரீதியான நிகழ்வு “மடிப்பிச்சை’ கோரலும் இடுதலும்.இது பெரும்பாலும் கண்ணகை மற்றும் மாரி அம்மன் கோவில்கள் நிகழும் வைகாசி மற்றும் ஆனி மாதங்களில் நிகழ்கிறது.பெண்களுக்கு உரித்தேயான பிரத்தியேக வழிபாட்டு முறை இது.மடிப்பிச்சை எடுக்கும் தினமன்று அதிகாலையிலேயே குளித்து முழுகி சேலை அணிந்து தயாராகி விடும் பெண்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ இந்த கைங்கரியத்தை காலை ஏழு மணி அளவில் ஆரம்பிப்பார்கள்.கையில் “பத்திரகொத்து’ எனப்படும் வேம்பிலைகளை வைத்துக்கொண்டு அயல் வீடுகளுக்கும் உறவினர் வீடுகளுக்கும் சென்று தங்கள் சேலையின் கொசுவத்தை விரித்துக்கொண்டு “அம்மனின் பெயரினால் மடிப்பிச்சை இடுங்கள்’ என கோரிக்கை வைப்பர்.இதற்கென எல்லா வீடுகளிலும் தயாராய் நெல் இருக்கும்.அந்த வீட்டின் பெண்களோ அல்லது சிறுமிகளோ வந்து கேட்கும் பெண்களுக்கு சிறிய பாத்திரம் அல்லது “தாம்பளத்தினால்’ மடிநெல்லினை இடுவர்.

ஸப்த தேவிகளின் பெயரினால் ஏழு வீடுகளில் மடிபிச்சை எடுத்து முடிந்ததும் அதை கால்நடையிலேயே சென்று கோவிலில் பிரத்தியேகமாய் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் கொட்டி விட்டு வருவார்கள்.இந்த மடிபிச்சை எடுத்து முடியும் வரை பெண்கள் அன்ன ஆகாரம் உட்கொள்ளாமல் விரதம் இருப்பர்.நேர்த்திகளின் பெயரிலோ அல்லது தொன்று தொட்ட வழக்கங்களின் பெயரிலோ இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.மடிப்பிச்சை இட முடியாத வீடுகளில் அதாவது ஏதாவது குற்றங்கள் நிகழ்ந்து விலக்கப்பட்ட வீடுகளில் ( மாதவிலக்கு அல்லது மரணம்) வாயிலில் வேம்பிலைகளை கொத்தாக கட்டி வைத்திருப்பர் அடையாளம் காண்பதற்காய்.

கோவிலில் சேர்ந்த இந்த நெல்லிருந்து அதனை குற்றி அரிசியாக்கி அம்மனுக்குரிய விசேட நைவேத்தியமான “ நோற்பு சோறு’ செய்யப்படும்.
‘ஸ்மார்ட் பெண்கள் அல்லது ஸ்கூட்டி பெண்களின்’ காலத்தில் இதுவும் ஒரு அருகி வரும் நடைமுறையாயினும் கிராமத்தின் மூத்த தலைமுறையினால் இன்றும் தீவிரத்துடன் பின்பற்றப்பட்டு வருகிறது.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624950

Translate