கிட்டதட்ட 1980 களின் முற்பகுதி தொடங்கி 2000 இன் முற்பகுதி வரை ஒரு விழாவின் சிறப்பினை தீர்மானிப்பவையாக இருந்தவை இந்த ‘ஒலிபெருக்கிகள்” அல்லது ‘ஸ்பீக்கர்கள்”. ஒருவர் நமது வீட்டுக்கு வந்து அழைப்பிதழ் தந்து விட்டு சென்றால் அடுத்து நாம் எதிர்பார்ப்பது அந்த வீட்டில் ஒலிபெருக்கி பாடுகிறதா இல்லையா என்பதனையே.விழாவுக்கான திட்டமிடுதல்களில் முதலில் தீர்மானிக்கப்படுவது “ஸ்பீக்கர்” எடுப்பதா இல்லையா என்பது பற்றியே.
கோவில் விழாக்கள் தொடங்கி வீட்டின் அனைத்து வைபவங்களுக்கும் இதுவே பிரதானமான கதாநாயகன் எனில் அது மிகையல்ல.முதன்முதலாக எனது பால்யத்தில் இதனை நான் கண்டது களுதாவளை பிள்ளையார் கோவிலின் உற்சவம் ஒன்றின் போதே.அன்றிலிருந்து அது எனக்கு ஒரு விசித்திரமான பொருளும் நண்பனுமாய் விட்டது.நான் கீறிய அத்தனை சித்திரங்களிலும் எப்படியாவது “ஸ்பீக்கர்கள்”ஒரு சோடி பாடும்.. ஒரு சோடி ஒலிபெருக்கி பாடும் எங்கள் ஊர் கோவில்களில் இருந்து வித்தியாசமாய் அமைவது அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பாடும் மூன்று அல்லது நான்கு சோடி “ஒலிபெருக்கிகளே”.தீர்த்தத்துக்கு அடுத்தநாள் பாடசாலையில் வந்து நண்பர்களிடம் புதினம் பகர்கையில் முதலாவதாய் தெரிவிப்பது அங்கு எத்தனை சோடி ஒலிபெருக்கிகள் பாடின என்பதையே.அவ்வளவு தூரம் அவைகள் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.
எங்கள் ஊரின் பாலமுருகன் கோவிலின் உற்சவத்துக்கு காரில் ஸ்பீக்கர்கள் வருகையில் குதிக்கும் மனசு மீண்டும் அவைகள் சொந்த ஊருக்கு போகையில் வாடி விடும்.ஒரு கோவிலில் அல்லது வீட்டில் இருந்து ஒலிபெருக்கிகள் மீள எடுத்துச்செல்லப்படால் அதன் அர்த்தம் விழாவின் அல்லது விசேடத்தின் முடிவினையே குறிக்கும்.
வீட்டு விசேடங்களை பொறுத்தமட்டில் அந்த வீட்டில் ஒலிபெருக்கி பாடினால் அது “விழா” அல்லது “மௌனவிழா’.சிறப்பாக செய்தல் என்பதன் அர்த்தம் “ஸ்பீக்கர்’ எடுப்பதனையே.சில வீடுகளில் இரண்டு மூன்று நாட்கள் ஏன் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக ஒலிபெருக்கிகள் பாடிய நாட்களும் உண்டு.இதனை வீட்டில் உள்ள பெரியவர்கள் திட்டினாலும் சிறிசுகளான நாங்கள் ஒலிபெருக்கிகள் பாடுவதனையே விரும்பியிருந்தோம்.
முந்தைய காலங்களில் கூட்டு குடும்பமுறை வாழ்வியலில் ஒரு வீட்டின் விசேடம் தனியே குறித்த குடும்பத்தினரால் செய்யப்படுவதல்ல.மாறாக உறவுகள் ஒவ்வொருவரும் ஒரு செலவினை பொறுப்பெடுத்து கொண்டாடினர்.அந்த நாட்களில் “ஸ்பீக்கர் செலவினையும்” ஒருவர் பொறுப்பெடுப்பதுண்டு.
உண்மையிலேயே இந்த ‘ஸ்பீக்கர்’ இயக்குனர்களின் பாடல் தெரிவு என்பது ஒரு ஒழுங்குமுறையினதாக இருந்தது.அதிகாலையில் பக்தி பாடலினை போட்டு பின்னர் அந்த வருடத்திலும் அதற்கு முன்னரும் வெளிவந்த புதிய படத்தின் பாடல்கள் வரிசைக்கிரமத்தில் ஒலிபரப்பப்படும்.அதன் பின்னர் மதிய விருந்தும் உற்சாக பான பரிமாறல்களும் ஆரம்பமாகும் மதிய நேரத்தில் இருந்து மாலை வரைக்கும் பழைய பாடல்களும் அதன் பின்னர் ஒரு மணித்தியாலம் வரை புதிய பாடல்களும் ஒலிபரப்பாகி இரவு சுமார் எட்டு அல்லது ஒன்பது மணிக்கு ஒலிபெருக்கிகள் நிறுத்தப்படும்.அன்று ஒலிபெருக்கியில் கேட்ட மெட்டுக்களே இன்றும் என் மனதில் பசுமையாய் ஒலிக்கிறது.இடையில் மாலை ஆறுமணியளவில் அந்த குடும்பத்தின் உறவுகளினால் “மைக்’ இல் பாடப்படும் பாடல்கள் ஒலிபரப்பப்படும்.
எப்போதும் இன்பத்தின் ஒலிகளை அள்ளித்தரும் ஒலிபெருக்கிகள் நான் அறிய சோக இசைகளை ஒலிபரப்பியது திலீபனின் மறைவின் போதே.அந்த நாட்களில் ஊரே சோகமயமாகி கிடந்தது இந்த இசையினால்.
எல்லாவற்றுக்கும் அருகில் உள்ள முகாமில் அனுமதி எடுக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்ட தொண்ணூறுகளில் இந்த ஒலிபெருக்கி பாவனைக்கும் அனுமதி நடைமுறை கொண்டுவரப்பட்டிருந்தது.ஒரு தரம் பாலமுருகன் கோவில் உற்சவத்தில் இரவு திருவிழா ஒன்றில் “அவர்கள்” வந்து தங்கள் பாடல்களை போட்டு விட அடுத்தநாள் கோவில் நிர்வாகம் விசாரணைக்கு அழைக்கப்பட்டமையும் அடுத்த நாளில் இருந்து இறுதி நாள் வரைக்கும் “மௌன உற்சவமாய் “ அந்த ஆண்டின் திருவிழா முடிவுற்றதும் மறக்க முடியாதது.
ஆவணி மாதம் போன்ற மாதங்களில் ஒலிபெருக்கிகளுக்கு மவுசு அதிகம்.சில நாட்களில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் ஒலிப்பெருக்கிகள் ஒலிக்க எதை கேட்பது என்ற குழப்பமும் தலையிடியும் கூட வருவதுண்டு.
நாகரிகம் மிகுந்த இந்த காலத்தில் ஒலிபெருக்கி பாவனை நல்ல காரியங்களில் இருந்து தவிர்க்கப்பட்டு வீட்டின் மரணவீடுகளுக்காய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது என்னவோ போலிருக்கிறது.எனினும் அதுவும் கூட ஒருவகையில் நன்மையே என்று எண்ண தோன்றுகிறது.ஏனெனில் இப்போது வரும் பாடல்கள் எதுவும் கேட்கும் தரத்தில் இல்லை.
டி.எம்.எஸ் மற்றும் சீர்காழியின் பாடல்களை வேண்டுமென்றே குப்பைக்குள் வீசிய கோவில்களின் ஒலிபெருக்கிகளை என்னால் மன்னிக்க முடியவில்லை.சகோதரர் பகீரதன் அவர்களின் முன்னைய பதிவொன்றின் படி பக்திபாடல்கள் ஒன்று புரட்சி கீதங்கள் போன்றோ அல்லது சினிமா பாடல்கள் போன்றோ இருப்பதாய் குறிப்பிட்டது மறுக்கமுடியாத யதார்த்தம்.இன்று கோவில்களில் பக்தி உணர்வு எழாமல் இருக்க ஏதோ உப்பற்ற சோறு போலிருக்கும் பக்தி பாடல்களும் ஒரு காரணம் .
ஒலிபெருக்கி ........ வாழ்ந்து கெட்ட வகையறா.
0 facebook-blogger:
கருத்துரையிடுக