(தி.லலிதன்)
![]() |
அந்த நாட்களில் இப்போது மாதிரி அரிசி பைகளில் அடைக்கப்பட்டு வருவதில்லை.நெல் வாங்கி ஊரில் இருக்கும் அரிசி ஆலைகளில் குற்றித்தான் எடுக்க வேண்டும் அல்லது உரலில் போட்டு குற்றி குத்தரிசியாக்கி எடுக்க வேண்டும்.நாங்கள் நெல் குற்ற கொடுத்தால் அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியுடன் சேர்த்து கொஞ்சம் இடிந்த அரிசி அதாவது நன்றாக உடைந்த அரிசியையும் சேர்த்து தருவார்கள்.இந்த உடைந்த அரிசியை தமிழ் அகராதியின்படி “குறுணை” என்பர்.பேச்சு வழக்கில் ‘குருணல்” என்பர்.சிறிய நெல் என்பதை குறிக்க அது குறு நெல் ஆகி பின்னர் குருணல் ஆகியதாயும் கூறுவதுண்டு.இதை நான் ஆங்கில அகராதிகளில் தேடியபோது rice grit என்ற பதம் கிட்டிற்று.
சரி இனி விடயத்துக்கு வருவோம்.இந்த இடிந்த அரிசியை அல்லது குருணலை சாதம் வடித்தால் அதன் பெயர் குருணல் சோறு.
எனது வீட்டிலேயே முந்தைய நாட்களில் அநேகமாய் சனி ஞாயிறு தினங்களில் காலை ஆகாரம் இதுவாகவே இருக்கும்.சோற்றினை விரும்பாத சிறுபிள்ளைகளும் கூட குருணல் சோற்றினை மிகவும் ருசித்து சாப்பிடுவர்.இது சோற்றினை போல உலர்ந்து இருக்காது சிறிது நீர்த்தன்மையுடன் களி போலவும் இருக்கும்.அதாவது குருணல் சோற்றினை மணி மணியாய் உதிர்த்த முடியாது.
இதற்கு இணையன் காய்ந்த மிளகாய் ,தேங்காய் துருவல் ,உப்பு,பழப்புளி இத்தோடு மாசி அல்லது நெத்தலிக்கருவாடு சேர்த்து அம்மியில் அரைத்த சம்பல்.இந்த சம்பலையும் சுடச்சுட குருணல் சோற்றையும் சேர்த்து ஒரு பிடி பிடித்தால் அம்மாடி அதன் சுகம் எழுத்தில் நான் வடிக்கவியலாது.
இதோட சேர்த்து சுட்ட உப்புக்கருவாடும் உங்கட கோப்பையில் இருந்தால் நீங்கள் வேறு ஆகாரத்தை தேட மாட்டீர்கள்.இப்போதே நாவூறச்செய்யும் தேவாமிர்தசுவையது.சில வேளைகளில் இதை மாலை ஆகாரமாயும் அம்மா செய்வதுண்டு.
இந்த சோறு உங்களுக்கு இன்னும் சுவைக்க வேண்டுமாயின் நீங்கள் பயிர்த்தோட்டங்களுக்கு அதிகாலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு போய் நீர் ஊற்றி விட்டு காலை பத்து மணி போல திரும்பி நல்ல பசியுடன் சாப்பிட வேண்டும்.அப்படி இருக்கும் சுவை.
இந்த இடிந்த அரிசி அல்லது குருணலின் இன்னும் சில பயன்கள்.
1. வீட்டில் வளர்க்கும் கோழிகளுக்கு நீருடன் சேர்த்து கரைத்து கொடுக்கலாம்.
2. காய்ச்சல் நோயாளிகளுக்கு குருணலினை கஞ்சி செய்து கொடுத்தல்.இந்த கஞ்சியுடன் கொஞ்சம் காரமாய் ஏதும் சேர்த்துக்கொடுத்தால் அது அவர்களின் வாய்க்கு சுவையும் உடலுக்கு வலிவும் சேர்க்கும்.
3. இந்த அரிசிக்கு நீர் சேர்த்து நன்கு பிசைந்து சீனியும் தேங்காய் துருவலும் சேர்த்து செய்யப்படும் “உரொட்டி’.இதை எங்கள் கிராமத்தில்’மங்கு ரொட்டி’ என்பர்.அதன் சுவை தனி ரகம்.
இந்த பிறவியில் இன்னொரு தரம் “மங்கு ரொட்டி’ சாப்பிட கிடைக்குமோ தெரியல்ல.
இந்த குருணல் சோறு பாட்டாளிகளின் குறியீடாயும் இருந்தது.வீட்டில் அரிசி இல்லாத ஏழைகளின் வீட்டில் கட்டாயம் கொஞ்சம் குருணல்லாவது இருக்கும்.இதை வைத்தே மதியம் ஒரு வேளை சமைத்து உண்ட குடும்பங்களும் உண்டு.”ஒரு குருணல் மணிக்கும் வழியில்லாதா குடும்பம்’ என வறுமைப்பட்ட குடும்பங்களை அழைப்பது எங்கள் கிராம வழக்கம்.
கூகிள் இல் இந்த குருணல் சோற்றுக்கு படங்களை தேடி கிட்டவில்லை.அதனுடன் தொடர்புடைய படங்களையே இங்கே இணைத்துள்ளேன்.நண்பர்கள் மன்னிக்கவும்.
இந்த பிறவியின் பயன் என்பது இன்னொரு தரம் மங்கு ரொட்டியும் குருணல் சோறும் சாப்பிடுவதே.மிகவும் கவலையான விடயம் யாதெனில் மிகவும் சத்தும் சுவையும் நிரம்பிய இந்த ஆகாரங்களை கிராம மக்களும் மறந்து போய் கோதுமை பண்டங்களுள் புகுந்து கொண்டமையே.
-அன்பும் நன்றியும்-
0 facebook-blogger:
கருத்துரையிடுக