வியாழன், 18 ஆகஸ்ட், 2016

மட்டக்களப்பின் கிணறு வெட்டும் பாரம்பரியங்கள் மற்றும் “பரத்தை சோறிடல்”

(தி.லலிதன்)
முந்தைய நாட்களில் மட்டக்களப்பில் கிணறு தோண்டுதல் என்பது கூலிக்குரிய விடயமன்று.மாறாக அந்த பகுதி இளையவர்களால் செய்யப்படும் உபகாரம் போன்றதே கிணறு தோண்டுதல் ஆகும்.இதற்குரிய காரணமாவது யாதெனில் நீர் என்பது ஒருவனின் வாழ்வில் இரு விழிகள் போன்றது.விழிகள் போன்ற இந்த நீரானது இறைவனால் அருளப்பட்ட கொடை போன்றது.எனவே இந்த நீரினை கண்டடைய எடுக்கும் முயற்சிக்கு பணம் பெறுவது பாவகாரியமாகும் என்பது பண்டைய நம்பிக்கையாகும்.

ஒரு சுப தினத்தில் கிணறு வெட்டுவதற்கு முடிவு செய்யப்பட்ட இடத்தில் அல்லது அதற்கு அருகாமையாக ஒரு உயரமான கோலினை நட்டு நன்கு முற்றிய ஒரு தேங்காயை உரிக்காமல் விநாயகப்பெருமானுக்கு நேர்த்தி இட்டு அந்த கோலில் உயர்த்தூக்குவதன் மூலம் கிணறு வெட்டுதலுக்கான அடி இடப்படுகிறது.
பின்னர் வருகின்ற வளர்பிறை மாலைப்பொழுது சுமார் ஆறரை அல்லது ஏழு மணியளவில் இந்த கிணறு தோண்டும் படலம் தொடங்கி விடும்.இந்த பணியில் உறவுகளும் அயலாவர்களுமாய் ஒரு இருபது இளைஞர்கள் வரை பங்கேற்பர்.அந்த வீட்டு பெண்கள் ஒரு பக்கம் தேநீர் தயாரிக்க வீதியில் போகும் மின்கம்பங்களில் இருந்து ‘கொழுவி’ எடுக்கப்பட்ட மின்சாரத்திலிருந்து ‘குண்டு பல்புகள்’ அந்த இடத்துக்கு ஒளியூட்ட பின்னணி இசையில் எம்.ஜி.ஆர் இன் பாடல்கள் கேசட் ரெகார்டரில் நாங்கள் சிறிசுகள் ஓடிப்பிடித்து விளையாடலில் என அந்த இடமே ஒரு விழாத்திடலாகி விடும்.
சமைப்பர்
இடையிடையே தாகசாந்தி நிகழ்வுகள் இடம்பெற்றாலும் இந்த கிணறு வெட்டுதலின் மிகப்பெரிய highlight எனப்படுவது இங்கே வழங்கப்படும் இராப்போசனம் அல்லது ‘பரத்தை சோறிடல்’ தான்.இந்த பெயர் உருவாக்கத்துக்கான காரணம் எதுவென நானறியேன்.ஆனால் இந்த வேலைக்கு கூலி என்பதே பரத்தை சோறுதான் என நானறிவேன்.எங்காவது பரத்தை சோறிடுகிறார்கள் எனின் வேலை செய்வோரையும் விட ஏனையோரும் வந்திருந்து அந்த விருந்தை சுவைப்பர்.ஏனெனில் அதன் சுவை அப்படி.

இதற்கென அன்று மாலையில் பிடிபட்ட ‘மாப்பிள்ளை கீரி’ அல்லது ‘பாரை’ மீன்களை வாங்கி நல்லதொரு பாலாணம் வைப்பர்.அல்லது மரவள்ளி கிழங்கை மாசி அல்லது நெத்தலி கருவாட்டுடன் சேர்த்து ஆணம் காய்ச்சி மேற்குறித்த மீன்களை நல்லதோர் உறைப்பு குழம்பு சமைப்பர்.வேலையின் இடையில் சுமார் ஒன்பதரை பத்து மணிக்கு இந்த விருந்து நிகழும்.நிலவொளியின் பின்னணியில் இந்த உணவை சுவைப்பது ஒரு பேரானந்த அனுபவம்.ஒரு நிலாச்சோற்றை விஞ்சிய அனுபவம்.எங்கள் வீட்டில் கிணறு தோண்டிய நேரம் இந்த அனுபவம் எனக்கும் கிடைத்தமை மறக்கவொணாது.
நள்ளிரவு பன்னிரண்டு மணி தாண்டினால் பெரும்பாலும் நீர்ச்சுரப்பினை கண்டுவிடுவார்கள்.இதை நாம் அழைப்பது “தண்ணீர் காணுதல்”.அதன் பின்னர் சந்தோஷ கூச்சலுடன் அன்றைய நாள் வேலை நிறுத்தப்படும்.அடுத்த நாளிலிருந்து கொத்தனாரின் வேலை தொடங்கும்.சிறிய சிறிய பகுதிகளாக கிணற்றினை கட்டி மண் மூடப்படும்.இதனை நாம் “கொட்டிறக்குதல்’ என அழைப்போம்.நிலத்தின் மேல்மட்டம் வரை சுமார் மூன்று முதல் ஆறு கொட்டுகள் வரை இறக்கப்படும்.அது அவரவர் நீர் கண்ட ஆழத்தை பொறுத்தது.(படங்கள் 1,4,5)
நீரின் ஆழம் குறைவாயின் அல்லது அந்த இடத்தில் கொட்டிறக்குவது கடினமாயின் ‘பூவல்’ எனப்படும் பட்டறைகளில் தயாரிக்கப்பட்ட கிணற்று வட்டங்களை கொண்டும் கிணறு அமைக்கப்படும்.அனேகமாக மட்டக்களப்பின் படுவான்கரை பகுதிகளில் இதனை காணலாம்.(படம் 2)
எல்லா கொட்டுக்களும் கட்டி முடிய அந்த கிணற்றுக்கு “துலாந்தும்’ ‘துலாக்கோலும்’ இடப்படும்.((படம் 3) பின்னர் ஒரு நல்ல நாள் காலையில் அந்த வீட்டின் பெண் பிள்ளைகளிளால் கிணற்றுக்கு பூமாரி செய்யப்படும்.அதாவது பூக்களினால் பூசை செய்தல்.பின்னர் அந்த கிணற்றின் நீர் அள்ளி சூரிய பகவானுக்கு வெண்பொங்கல் ஆக்கி படைத்தலுடன் கிணறு தோண்டுதல் படலம் நிறைவுறும்.
கிணறு வெட்டும் பாரம்பரியம் கூட இன்று “பைப் லைன்’ நீரினால் தொலைந்து போனமை துரதிஸ்டமே.இன்று கிணற்றினை ஒதுக்கி விட்டு பைப்லைன் அல்லது மினரல் போத்தலுக்கு மாறியோர் எத்தனையோ பேர்.ஆனால் நல்ல வெயிலில் ஒரு பத்துமைல் ( அனேகமாக களுவாஞ்சிக்குடி சந்தைக்கு அல்லது படுவான்கரை பகுதிகளுக்கு)) துவிச்சக்கரவண்டி ஓடி வந்து உடனேயே எனது வீட்டு கிணற்றில் தண்ணீர் அள்ளி குடித்த சுகம் இனி மீளுமா?
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate