மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைச் செயலாளரின் நிருவாக மந்த நிலை மற்றும் நிருவாகச் சீர்கேடுகளைக் கண்டித்து பொதுமக்கள் திரண்டு செவ்வாய்க்கிழமை பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டப்பேரணியொன்றை நடத்தினர்.
உள்ளுராட்சி நிருவாகத்தினால் செய்து முடிக்கப்பட வேண்டிய பல கருமங்களை குறித்த செயலாளர் செய்து முடிக்காது வினைத்திறனற்ற முறையில் காலங் கடத்துவதாகவும் அதனால் இந்தப் பிரதேச சபைப் பிரிவில் பல வகையான நிருவாகச் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
குறித்த செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்து வினைத்திறனுள்ள ஒருவரை செயலாளராக நியமிக்குமாறும் ஆர்ப்பாட்டக் காரர்கள் கோரி நின்றனர்.பொலிஸாரின் அனுமதி பெற்றே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அங்கு சமுகமளித்திருந்த மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல் நிருவாக ரீதியிலான நடைமுறைகளுக்கேற்ப பொதுமக்களின் கோரிக்கை கவனத்திற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இப்பிரதேச சபையின் செயலாளருக்கு இடமாற்றக் கடிதம் கிடைத்துள்ள போதும் நிருவாக ரீதியிலான நடைமுறைகளுக்கேற்ப அவர் மேன்முறையீடு செய்துள்ளார் அதன்பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக