இலங்கையில் கண்டி மாவட்டம் பிலிமத்தலாவ என்ற இடத்தில், 14 வயது சிறுமி ஒருவருக்கு வலது காலில் ஏற்பட்ட பிரச்சனைக்காக, இடதுகாலில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணையை துவங்கியுள்ளது.
கண்டி பேராதனை போதனா வைத்தியசாலையில் இம்மாத ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கே இந்த கதி நேர்ந்துள்ளதாக சிறுமியின் தந்தை காவல்துறையில் புகார் செய்துள்ளார்.
வலது காலில் உள்ள உபாதைக்காக, எதற்காக இடது காலில் சிகிச்சை செய்யப்படடுள்ளது என்று கேட்டபோது, வலது காலிலும் சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவர் தன்னிடம் கூறியதாக சிறுமியின் தந்தை தெரிவித்தார்.
அறுவை சிகிச்சைக்கு முன்னதாக மருத்துவர் இடது காலை மருந்துகளால் சுத்தம் செய்தபோது, தனக்கு வலது காலில்தான் வருத்தம் இருப்பதாக மகள் கூறினார் எனவும், அதனை மருத்துவர் கருத்திற்கொள்ளவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதனிடையே, தவறான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவருக்கு எதிராக முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது உறுதி செய்யப்படவில்லை என அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்க துணைச் செயலாளர் டாக்டர் நவீன் டி சொய்சா பிபிசியிடம் தெரிவித்தார்.
விசாரணையின் இறுதியில் மருத்துவர் குற்றவாளி என்று அடையாளம் காணப்படுவாராயின், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை எனவும் அவர் கூறினார்.bbc

0 facebook-blogger:
கருத்துரையிடுக