மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டாவது பெரிய மருத்துவமனையாக கருதப்படும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டிட தொகுதிகள் நேற்று(01.02.2017) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது.2011ஆம் ஆண்டு சுகாதார அமைச்சராக இருந்த இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் அழைப்பினையேற்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அங்குள்ள குறைபாடுகளை கேட்டறிந்துசென்றிருந்தார்.
அதற்கு அமைய அன்றைய காலத்தில் ஜப்பான் அரசாங்கத்தின் ஜெய்கா திட்டத்தின் கீழ் 514 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டு நவீன முறையில் கட்டிட தொகுமிகள் அமைக்கப்பட்டுவந்தன.நவீன முறையிலான இரத்த வங்கி, நவீன சத்திர சிகிச்சைக் கூடம், சட்ட வைத்திய பிரிவு, கதிர்வீச்சுப் பகுதி, நோயாளர்களின் தங்குமிட வசதி, நிர்வாகத்தொகுதி உட்பட பல்வேறு பகுதிகளைக்கொண்டதாக இந்த வைத்தியசாலை கட்டிட தொகுதி அமைக்கப்பட்டுள்ளன.
இதன் திறப்பு விழா கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முகம்மது நசீரின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினாகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்டதுடன் வைத்திய நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ஆரம்பித்துவைத்தார்.
அத்துடன் இதன்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வைத்தியசாலை அபிவிருத்திக்குழு மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான பொதுமக்கள் சிகிச்சைபெறும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அடுத்ததாக வைத்தியசாலையாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை இருந்துவருகின்றது.
கடந்த கால யுத்த சூழ்நிலையின்போது படுவான்கரை பகுதி மக்களுக்கும் யுதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அர்ப்பணிப்புமிக்க சேவையாற்றிய வைத்தியசாலையாகவும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை இருந்துவருகின்றது.தினமும் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருத்துவ சோதனை பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சைபெற்றுச்செல்வதும் குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக