இந்தியாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் கற்கைநெறியை தொடர்வதற்கு தகுதியான இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது.
இளமாணி, முதுமாணி மற்றும் ஆராய்ச்சிக்கான புலமைப்பரிசில்கள் மற்றும் கலாநிதிப்பட்ட ஆய்வு ஆகியவற்றுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக யாழ்;ப்பாணம் இந்தியத் துணைத்தூதரகம் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் கற்பதற்குத் தகுதியான இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வருடாந்தம் வழங்குகிறது. இதில் இளமாணி, முதுமாணி மற்றும் ஆராய்ச்சிக்கான புலமைப்பரிசிலும் கலாநிதிப்பட்ட ஆய்வுக்கான புலமைப்பரிசிலும் வழங்கப்படவுள்ளன.
மருத்துவப்பட்டப்படிப்புகள் தவிர்ந்த பொறியியல், விஞ்ஞானம், வணிகவியல், வர்த்தகம், பொருளியல், மானிடவியல், மற்றும் கலை (சாஸ்த்திரிய இசை, நடனம் கட்புல கலைகள்) உள்ளடங்களாக கற்கைகளுக்கு 100 நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளன.
மௌலானா ஆஸாத் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் விவசாய கற்கைக்கு 10, விஞ்ஞான கற்கைக்கு 20, தொழில்நுட்ப கற்கைக்கு 20 என 50 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. தகவல் தொழில்நுட்பம், பொறியியல் கற்கைகளுக்காக, 25 ராஜீவ் காந்தி புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளன. மருத்துவம் தவிர்ந்த கலாநிதிப்பட்ட ஆய்வுக்காக பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டத்தில் 5 புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.
இந்திய அரசானது இந்தப் புலமைப்பரிசில்களை திறமை அடிப்படையில் இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்குகிறது. இலங்கை அரசின் உயர்கல்வி அமைச்சின் ஆலோசனையுடன் மேற்படிப் பட்டப்படிப்புக்களுக்கான தெரிவுகள் மேற்கொள்ளப்படும் அனைத்துப் புலமைப்பரிசில்களும் மாதாந்த செலவினக் கொடுப்பனவுக்கு மேலதிகமாக பாடநெறியின் காலப்பகுதி முழுமைக்குமான கல்விக்கட்டணத்தையும் உள்ளடக்குகின்றன. அத்துடன் தங்குமிடக் கொடுப்பனவு மற்றும் புத்தகங்கள், காகிதாதிகளுக்கான வருடாந்தக் கொடுப்பனவையும் வழங்குகிறது.
கலாசார உறவுகளுக்கான இந்தியப் பேராயத்தின் புலமைப்பரிசில் பெற்றவர்கள் அனைவருக்கும் முழுமையான சுகாதார வசதி, இலங்கையிலிருந்து செல்லும் போது இந்தியாவில் மிகக்கிட்டிய விமான நிலையத்துக்கான விமானப் பயணக் கொடுப்பனவு, இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கான கல்விச் சுற்றுலாக் கொடுப்பனவுடன் மேலும் பல உதிரிக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
இலங்கை அரசின் உயர்கல்வி அமைச்சினூடாக மேற்படிப் பட்டப்படிப்புக்களுக்கான தெரிவுகள் மேற்கொள்ளப்படும். இலங்கை உயர்கல்வி அமைச்சானது இப்புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
விண்ணப்பப்படிவங்களை இலங்கை உயர்கல்வி அமைச்சின் இணையத்தளமான www.mohe.gov.lk இலிருந்து தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை இலங்கை அரசின் உயர்கல்வி அமைச்சின் விலாசத்துக்கோ அல்லது யாழ். இந்தியத் துணைத் தூதரகத்துக்கோ எதிர்வரும் 31 டிசெம்பர், 2015 இற்கு முன்னதாக கிடைக்கக்கூடியதாக அனுப்பி வைக்கவேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு இலங்கை அரசின் உயர்கல்வி அமைச்சு அலுவலகத்தையோ அல்லது யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தையோ தொடர்பு கொள்ள வேண்டும்' கோரப்பட்டுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக