தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்களுக்குள் கலந்தாலோசித்து அரசியல் யாப்பு யோசனையை முன்வைக்காது, தமிழ் மக்களின் கருத்துகளையும் பெற்று அதன் அடிப்படையில் அரசியல் யாப்பு யோசனையை முன்வைக்க வேண்டுமென கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி அங்கு செவ்வாய்கிழமை (19) மாலை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'புதிய அரசியலமைப்புச் சபைக்கு முன்வைக்கப்படும் யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் கட்சி உறுப்பினர்களும் கூடி முடிவெடுத்தால் மாத்திரம் போதாது. மாவட்டம், பிரதேசம், கிராமங்கள் என்ற அடிப்படையில் மக்களைச் சந்தித்து புத்திஜீவிகள், கல்விமான்கள், சமூக, சமயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளையும் பெற்று அரசியல் யாப்பு யோசனையை முன்வைக்க வேண்டும்.
இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 21ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளிநெச்சியில் கூடி ஆராயவுள்ளது. 22ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டங்களில்; தலைமையிடம் இந்த விடயம் தொடர்பில் வலியுறுத்தவுள்ளேன்' என்றார்.
'நாட்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் சூழ்நிலையில் இணைந்த வடக்கு, கிழக்கில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை உள்ளடக்கிய சமஷ்டி முறையிலான தீர்வை தமிழ் மக்கள் தொடர்ந்தும் வலியுறுத்துகின்றனர். ஆனால், இதனை பெரும்பான்மையின கடும் போக்காளர்கள் எதிர்க்க ஆரம்பித்துவிட்டனர்' எனவும் அவர் மேலும் கூறினார்

0 facebook-blogger:
கருத்துரையிடுக