சனி, 30 மே, 2015

“முதலமைச்சருடன் இடம்பெறும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டம்”

கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனங்களை வழங்குவது தொடர்பில் எதிர்வரும் 16ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சருடன் இடம்பெறும் பேச்சுவார்த்தையில் சாதகமான சமிக்ஞைகள் கிடைக்காவிட்டால் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுப்பது என மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் கூட்டம் இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் உ.உதயவேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

வேலையற்ற பட்டதாரிகள் கடந்த காலங்களில் பல போராட்டங்களை நடாத்தியபோதிலும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாது தொடர்பில் இங்கு கவலை தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் தங்களை ஏமாற்றிய நிலையே காணப்படுவதாகவும் தமது நிலைமைகள் தொடர்பில் யாரும் இதுவரை கவனம் செலுத்தவில்லையெனவும் இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.

தம்மை தங்களது அரசியல் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்த பார்ப்பதாகவும் தங்களது தேவைகள் குறித்து யாரும் கவனம் செலுத்தவில்லையெனவும் இங்கு பட்டதாரிகளினால் கூறப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் பட்டதாரிகள் நியமனத்தில் உள்வாங்கப்பட்டு வெளி மாகாணங்களில் கடமையாற்றும் சுமார் 1600 பேரை கிழக்கு மாகாணத்துக்குள் இணைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் இதன் காரணமாக தாம் கடுமையான பாதிப்புகளுக்குள் எதிர்நோக்க நேரிடும் எனவும் இங்கு கவலை தெரிவிக்கப்பட்டது.எனவே இவற்றினை தடுத்து நிறுத்தி வேலையற்ற பட்டதாரிகளுக்கு அந்த நியமனங்களை வழங்குவது தொடர்பில் நடவடிக்கையெடுக்குமாறு உரிய தரப்பினரை கேட்பது எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் இருந்துவெளியேறும் பட்டதாரிகளுக்காக விசேட நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு,ஆண்டுதோறும் வெளியேறும் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை கிழக்கு மாகாணசபை மேற்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தவேண்டும் எனவும் இங்கு கூறப்பட்டது.

கடந்த காலத்தில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனுமதிபெற்றுத்தருவதாக சில அரசியல்வாதிகள் தெரிவித்தபோதும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.நாங்கள் இது தொடர்பில் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து எமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டும்.

நாங்கள் மத்திய அரசாங்கத்தினை மட்டும் நம்பியிருக்காது கூடுதலான தொழில்வாய்ப்புகளை மாகாணசபை மூலம் பெற்றுக்கொள்வதற்கான அவசரமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

கிழக்கு மாகாண முதலமைச்சருடன் எதிர்வரும் 16ஆம் திகதி பேச்சுவார்த்தையினை நடாத்துவதற்கு நேரம் ஒதுக்கீடுசெய்து தரப்பட்டுள்ளது.அந்த பேச்சுவார்த்தையின்போது சிறந்த தீர்வு வழங்கப்படாவிட்டால் கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகளை ஒன்றுதிரட்டி தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தினை நடத்துவோம் எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்த பட்டதாரிகள் சங்கத்தின் கூட்டத்தின்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் 14 இணைப்பாளர்களும் இதன்போது நியமிக்கப்பட்டனர்.




Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624950

Translate