கிழக்கில் நடைபெறும் இந்து ஆலய உற்சவங்களின்போது கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதையும் பெண்கள் அதிகளவான தங்க நகைகள் அணிந்து செல்வதை தவிர்க்குமாறும் இந்து சமய நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள அம்மன் ஆலயங்களில் தற்போது வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில் கிழக்கிலுள்ள இந்து நிறுவனங்கள் ஆலய நிர்வாக சபையினரிடம் சமய மரபு வழக்காறுகளை பின்பற்றுமாறு ஆலோசனை வழங்கியுள்ளன.
கிழக்கில் வைகாசி மாதம் பத்தினி தெய்வம் கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி சடங்குகள் நடைபெறுவது வழக்கமாகும். இதனையிட்டு அனைத்துக் கிராமங்களும் ஊர்க்காவல் பண்ணப்பட்டு மிகுந்த பய பக்தியுடன் இந்து மக்கள் சடங்கு சம்பிரதாயங்களை கட்டுக்கோப்புடன் கடைப்பிடித்து வருகின்றனர்.இந்நிலையில் ஆலய உற்சவ காலங்களில் சில இடங்களில் இசைக்குழுக்கள் மற்றும் சினிமா சம்பந்தமான கலை நிகழ்ச்சிகள் என்பவற்றை ஆலய முன்றல்களில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இவ்வாறான நிகழ்வுகள் இந்து சமய நடைமுறைகளுக்கு எதிரான செயலாகும்.
ஆலய உற்சவ காலங்களில் கேளிக்கை நிகழ்வுகளை தவிர் த்து சமய மரபுகள், கலை கலாசார நிகழ்வுகளை ஒழுங்கு செய்து இந்து சமய விழிப்புணர்வை ஊட்டுமாறும் இந்து நிறுவனங்கள் கேட்டுள்ளன. இதைத் தவிர ஆலய உற்சவத்திற்கு செல்லும் பெண்கள் தங்க நகைகள் அணிந்து செல்வதை தவிர்க்குமாறும் கடந்த கால உற்சவங்களில் கலந்துகொண்ட பலரது தங்க நகைகள் திருடர்களால் திருடப்பட்டன. இவ்வாறான அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக