(முஹம்மட் ஆக்கில்)
வாழைச்சேனை பிரதேசத்தில் தங்கச்சங்கிலி அபகரிப்பு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வியாழக்கிழமை பிற்பகல் வீதியால் சென்ற பெண் ஒருவரின் தங்கச்சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் அச்சங்கிலியை அடகு வைப்பதற்கு உதவியதாகக் கூறப்படும் இரு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கண்ணகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மேற்படி பெண் சந்தைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இந்த அசம்பாவிதத்தை எதிர்நோக்கியுள்ளார். இப்பெண்ணின் வீட்டுக்கு அருகில் முகத்தை மூடும் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர், பாசிக்குடாவுக்குச் செல்லும் வழியைக் கேட்டுள்ளார்.
அவரும் வழி காட்டிய வேளையில் அப்பெண்ணை மேற்படி இளைஞர் காலால் தள்ளியுள்ளார். பின்னர், தவறுதலாகப் பட்டதென்று கூறி கீழே விழுந்த அப்பெண்ணை தூக்குவது போன்று நடித்து அவரின் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளதாக அப்பெண் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்ததாக தெரிவித்தனர்.
அப்பெண்ணின் மூன்றரை பவுண் தங்கச்சங்கிலியுடன், இச்சந்தேக நபர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் தலைக்கவசத்தையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக