வெள்ளி, 7 அக்டோபர், 2016

கிழக்கு மாகாண கல்வியற்கல்லூரி ஆசிரியர்களை எமது மாகாணத்திலே நியமிக்க கோரி சபையில் அவசரப் பிரேரணை.

(பழுவூரான்)
கிழக்கு மாகாண சபை இன்றைய (06.10.2016) அமர்வின் போது மாகாண சபை உறுப்பினர்களான ஜெ.ஜெனார்த்தனன் மற்றும் ரம்லான் மொகமட் அன்வர் ஆகியோரினால் 2016ம் ஆண்டு கல்வியற்கல்லூரிகளில் இருந்து வெளியாகிய கிழக்கு மாகாண ஆசிரியர்கள் அனைவரையும் கிழக்கு மாகாணத்திலேயே நியமிப்பதற்கான அவசரப் பிரேரணை ஒன்று
முன்மொழியப்பட்டது. இது தொடர்பாக சபையிலே உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) அவர்கள்,

இந்த அவசரப் பிரேரணையானது கிழக்கு மாகாண பிள்ளைகளின் கல்வி நலனை கருத்திற் கொண்டு தகுந்த நேரத்தில் சமர்பிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கிழக்கு மாகாணத்தின் மூதூர் வலயம், கல்குடா வலயம், மட்டக்களப்பு மேற்கு வலயம், பட்டிருப்பு வலயத்தின் போரதீவுப்பற்றுக் கல்விக் கோட்டம் ஆகியவற்றில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது மிகவும் அதிகமாக நிலவும் இந்த காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்வியற்கல்லூரிகளில் கற்கைநெறிகளினை பூர்த்தி செய்த ஆசிரிய நியமனம் பெற்றவர்கள் பிற மாவட்டங்களில் கற்பிப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 
கிழக்கு மாகாணத்திலே ஆசிரிய பற்றாக்குறை இருப்பது கல்வி அமைச்சுக்கும், கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் நன்கு தெரிந்திருந்தும் கல்வியற்கல்லூரிகளில் கல்வி கற்ற ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் இசுறுபாயவில் நியமனம் வழங்கப்பட போகின்றது என்பதை அறிந்தும் கூட நாங்கள் இந்த பிழையை விட்டிருக்கின்றோம். 
இன்று இந்த சபையிலே எதிர்கட்சி  தலைவர் அவர்கள் ஆற்றிய உரையினை நான் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்வதுடன் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.  கல்வியற்கல்லூரி ஆசிரியர்களுக்கு இன்றிலிருந்து (06.10.2016) பதினான்கு நாட்களுக்குள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட பாடசாலைகளில் கடமைகளை பொறப்பேற்க வேண்டும். சிலர் தமது சுயவிருப்பின் பெயரில் வெளி மாகாணங்களுக்கு தொழில் புரிய சென்றுள்ளார்கள். அவர்களைத் தவிர ஏனைய ஆசிரியர்களை முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் துரிதமாக செயற்பட்டு அவர்களை மீண்டும் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு வரவேண்டும்.
கிழக்கு மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களிற்கு நியமிக்கப்பட்டுள்ள  ஆசிரியர்களை இன்று மாகாண சபை அமைச்சுக்கு வரச்சொல்லி இருப்பதாhக அறிவதுடன் அவர்கள் வந்திருப்பதாகவும் அறிகின்றோம். இது பற்றி கல்வி அமைச்சரிடம் வினவிய போது இதுபற்றி தனக்கு தெரியாது என்று கூறுகின்றார். தயவுசெய்து இதில் யாரும் அரசியல் செய்யாமல் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து எமது மாகாணத்தில் உள்ள ஆசிரிய குறைபாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும். 
இந்த ஆசிரியர்களை மிகவும் கஸ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு நியமிக்க வேண்டும். அங்கிருக்கும் மாணவர்களுக்கும் இலவசக்கல்வி சென்றடைய வேண்டும். அதனை அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களை கல்வி அமைச்சரும் முதலமைச்சரும் கொண்டுவருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனவும் தெரிவித்தார்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624965

Translate