Sanjeev
கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத்தின்(பிரதிப்பணிப்பாளர்- தேசிய மொழிக்கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவகம்) நேரடி வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல சேவைகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றன. முன்னணியினால் க.பொ.த) சாதாரண தர மாணவர்களிற்கான இலவசக் கல்விக் கருத்தரங்கானது மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கருத்தரங்கின் 7ம் தொடரானது குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலயத்தில் 22,23 ஆகிய திகதிகளில் இடம்பெற்றிருந்தது. தமிழ்,கணிதம்,விஞ்ஞானம்,வரலாறு,ஆங்கிலம் ஆகிய பாடங்களைக் கொண்டதாக திட்டமிடப்பட்ட இக்கருத்தரங்கின் தொடர்ச்சியானது நாளை(திங்கட்கிழமை) நிறைவுறவிருக்கின்றது. இக்கருத்தரங்கில் புதுக்குடியிருப்பு,கிரான்குளம்,குருக்கள்மடம்,செட்டிபாளையம்,மாங்காடு,தேற்றாத்தீவு ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தனர்.
கருத்தரங்கின் முன்னைய தொடர்ச்சிகளில் 5 தொடர்களில் போரதீவு, பழுகாமம், வெல்லாவெளி, மண்டூர், தம்பலவத்தை, ஆனைகட்டியவெளி, திக்கோடை, தும்பங்கேணி, மகிழூர், குருமண்வெளி போன்ற பிரதேச மாணவர்களையும், 6ம் தொடரில் கிராங்குளம் பிரதேசத்தினை மையமாக கொண்டு அதனை அண்டிய பிரதேச மாணவர்களையும் உள்ளடக்கியவாறு கிழக்கின் இளைஞர் முன்னணியினர் நடாத்தியிருந்தனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இக்கருத்தரங்குகளில் கலந்து பயன்பெற்றிருந்தனர்.
முற்றுமுழுதாக இலவசமான முறையில் இக் கருத்தரங்குகள் பொருளாதார வசதி குறைந்த மற்றும் மேலதிக வகுப்புகளிற்கான வசதிகள் அற்ற பிரதேசங்களினை மையமாக கொண்டு நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இக்கருத்தரங்கு பற்றி முன்னணியின் தலைவர் கருத்து தெரிவிக்கையில்...
எமது மாவட்டத்தில் எமது சமூகத்தின் கல்வி நிலையினை உயர்த்துவதன் மூலமே சகல வழிகளிலும் பின்தங்கிய நிலையில் இருக்கும் எமது சமூகத்தினை அனைத்து வழிகளிலும் முன்னேற்றமடையச் செய்யலாம் எனும் நோக்குடன் ஆசிரியர் வளம் குறைவாக உள்ள பிரதேசங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் கல்வியில் முன்னேற தடையாக உள்ள பிரதேசங்களை உள்ளடக்கியவாறு இக் கருத்தரங்கு எம்மால் திட்டமிடப்பட்டிருக்கின்றது. இதே போன்று மேலும் ஓர் தொகுதி கருத்தரங்கானது படுவான்கரை பிரதேச பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களை ஒன்றிணைத்து 05 தொடர் கருத்தரங்குகளை இலவசமாக நடாத்தியிருந்தோம். அதேபோன்று கிரான்குளம் பிரதேசத்தில் நடாத்தியிருந்தோம். தற்பொழுது குருக்கள்மடம் பிரதேசத்தினை மையப்படுத்தி அதனை அண்டிய பாடசாலைகளினை சேர்ந்த மாணவர்களினை ஒன்றிணைத்து இக்கருத்தரங்கு இலவசமான முறையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கினை எதிர்வரும் காலங்களில் தொடர் கருத்தரங்காக நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
மாணவர்களின் முதலாவது படிக்கல்லான சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்களை சிறந்த சித்தியினை பெறவைப்பதோடு சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதே எமது குறிக்கோள். எனவே மாணவர்களாகிய நீங்கள் இவ் சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி கல்வியில் ஆர்வத்தினை அதிகரித்து பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறுவதே எமது முயற்சிக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவாக நான் கருதுகின்றேன். கலாநிதி அப்துல்கலாம் அவர்கள் கூறியது போன்று நீங்கள் என்னவாக வர விரும்புகின்றீர்கள், உங்களுடைய சமூகம் எவ்வாறு இருக்வேண்டும் என்பது பற்றி கனவு காணுங்கள்.கல்வியே எமக்கான அங்கீகாரத்தை சகல இடங்களிலும் பெற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த வழி ஆகும். இதனை அனைத்து மாணவர்களும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். அது மட்டும் அல்லாமல் எமது கிழக்கின் இளைஞர் முன்னணி அமைப்பில் எமது மாவட்டத்தின் சகல பிரதேசங்களினையும் சேர்ந்த இளைஞர், யுவதிகள் உத்வேகத்துடன் செயற்பட்டு வருகின்றனர். எமது செயற்பாடுகள் கல்வியினோடு மட்டும் நின்றுவிடாமல் எமது சமூகத்தினை சுகாதாரம், விளையாட்டு, கலை, கலாச்சாரம் ஆகிய சகல துறைகளிலும் படியுயர்த்தும் நோக்கில் இயங்கி வருகின்றது. எம்முடன் இணைந்த செயற்படுபவர்கள் சமூகத்தினை முன்னேற்றுவதுடன், தங்களுடைய வாழ்க்கையினையும் சிறந்த முறையில் அமைத்துக்கொள்வதற்கான உதவிகளையும் பெற்றுக்கொள்கின்றனர். மாணவர்களாகிய நீங்களும் எம்முடைய சமூகத்தில் அக்கறையுடையவர்களாக திகழ வேண்டும் அவ்வாறு திகழ்ந்தாலே எம்முடன் சேர்ந்து எமது சமூகத்தையும் முன்னேறச் செய்யலாம். அதுவே உண்மையானதும் நிலைபேறானதுமான முன்னேற்றமாகும். பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இறைவனையும் பிரார்த்திக்கின்றேன். என தெரிவித்திருந்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக