ஞாயிறு, 2 அக்டோபர், 2016

திக்கோடை – தும்பாலை மக்களின் குறைகள் தீர்க்கப்படுமா?

திலக்ஸ் ரெட்ணம் - 
'என்ன செய்யிற மனே இந்த தொழில செஞ்சாத்தான் சோறு தின்னலாம். இரண்டு பொம்பிளையல் ஒன்றை கரைசேர்த்து விட்டேன். இன்னொன்டு இருக்கே. அதுவும் நானும் என்ட மனுசனும் மகனும் இந்த குடில்லதான் இருக்கோம். இருபது வருசமாக இந்த கல்லுடைக்கும் தொழில செஞ்சு வாறன். இதில பத்து பதினஞ்சு நாளைக்கொருக்கா ஆறாயிரம் ரூபாய்க் காசு மிஞ்சும். அதிலதான் எல்லாம் செய்யனும். இங்க முக்கிய பிரச்சினையாக குடிநீர்ப் பிரச்சினை உள்ளது. கோடை காலத்தில் கிட்டமுட்ட நான்கு மாதங்கள் இந்த குடிநீர்ப்பிரச்சினை வரும். இதையும் தீர்த்து வைக்கவேண்டும். திக்கோடை பிரதான வழியூடாக மாத்திரம் தான் குடிநீர்க்குழாய் திட்டம் செல்கின்றது. எங்களுக்கும் அந்த திட்டம் வருமாக இருந்தால் மிகவும் பெரிய கொடையாக இருக்கும்.' என்கின்றார் லவகுமார் - மலர்.
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திக்கோடைக் கிராமத்தின் பிரிவுதான் தும்பாலை. எத்தனை ஆட்சிதான் மாறினாலும் அவர்களினுடைய கொள்கைத்திட்டங்கள் மாறினாலும்  இந்த கிராமத்தில் பல அடிப்படை பிரச்சினைகள் இதுவரைக்கும் தீர்க்கப்படமாலேயே உள்ளது. இங்கு மிகவும் முக்கிய பிரச்சினையாக காட்டுயானைகளின் அட்டகாசமும், குடிநீர்ப்பிரச்சினையும் உள்ளது. இருந்தபோதிலும் பலர் இன்னும் இருப்பதற்கு கூட வீடில்லாமல் இருந்து வருகின்றனர். திக்கோடையில் 485 குடும்பங்கள் வாழ்ந்து வந்தாலும் தும்பாலையில் 85 குடும்பங்கள் அன்றாட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து அல்லல்பட்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 144 குடும்பங்கள் வீடில்லாமல் வாழ்வதுடன் 122 குடும்பங்கள் தற்காலிக வீடுகளிலும் 22 கும்பங்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கி வாழ்கின்றனர். இங்கு 139 குடும்பங்களுக்கு மலசலகூட வசதி தேவையாக உள்ளது. விவசாயம் மற்றும் மந்தை வளர்ப்பு ஜீவனோபாயத் தொழிலாக இரந்தாலும் கடந்த காலம் தொட்டு கல்லுடைக்கும் தொழிலும் ஜீவனோபாயத் தொழிலாக இந்த மக்களுக்கு மாறிவிட்டது. 


இந்த கிராமத்தில் 35 வருடங்களாக இந்த கிராமத்தில் வதியும் கணபதிப்பிள்ளை மகாலிங்கம் அவர்கள் கருத்து தெரிவிக்ககையில் ' இந்த கிராமத்தில்  மிகவும் முக்கிய பிரச்சினையாக போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ளதாகவும், வீதிகள் புனரமைப்பு இல்லாமல் உள்ளதாகவும் கூறினார். அதாவது இந்த கிராமத்தில் ஆரம்ப காலத்தில் மூன்று குடும்பங்கள் இருந்ததாகவும் 1990ம் ஆண்டு வன்செயலின் பின்னர் பல குடும்பங்கள் குடியேறியுள்ளதாகவும் அப்போது இருந்த வீதி தற்போது இல்லாமல் மக்கள் அல்லல் படுவதாகவும் கூறினார். தற்போது கொங்கிறீட்டு பாதை இடப்படுவதாகவும் அப்பாதை முற்றாக முடியவில்லை என்றும், அரசியல் வாதிகள் தங்களை கடைக்கண்ணாலும் கூட பார்ப்பதாக தெரியவில்லை என்றும் அவர் வேதனைப்பட்டார். அரசியல்வாதிகள் வழமையான தாரக மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு வருவார்கள் பின்னர் கதிரையில் ஏறினால் எம்மக்களும் அவர்களினுடைய பிரச்சினைகளும் கண்களுக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.


ஆபத்துக்கு அருகில் வைத்தியசாலை இல்லை என்கின்றார் நாற்பது வருடங்களாக இந்த பிரதேசத்தில் வாழ்ந்துவரும் ந.சிவகுணம். அவர் மேலும் தெரிவிக்கையில் எமது இந்த கிராமத்தை சுற்றிவர அண்ணளவாக 25 ஊர்கள் உள்ளன. இந்த ஊர்மக்கள் சிறியதொரு விபத்தோ அல்லது நோயோ என்றால் நாங்கள் எட்டு கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள பழுகாமம் பிரதேச வைத்தியசாலை அல்லது பதினைந்து கிலோமீற்றர்களுக்கு அப்பால் உள்ள களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையினை நாட வேண்டிய நிலைப்பாடு உள்ளது. மேலதிக சிகிச்சைகளை பெறவேண்டுமாக இருந்தால் நாற்பது கிலோமீற்றரில் உள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை அல்லது கல்முனை வைத்தியசாலையினை நாடவேண்டி உள்ளது. கடந்தகாலத்தில் கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சரும் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தும்பங்கேணியில் வைத்தியசாலை நிறுவுவதற்கான இடத்தினை பார்வையிட்டனர். அதற்கான முன்ஏற்பாடுகள் எதுவும் நடைபெற்றதாக இதுவரையும் இல்லை. இவ்வாறு ஒரு வைத்தியசாலை எங்களது பிரதேசத்தில் அமையுமாக இருந்தால்;  இப்பிரதேச மக்களுக்கு மிகவும் வரப்பிரசாதமாக அமையும் என்று அவர் தெரிவித்தார். 


எமது கிராமம் காட்டுயானைகளினால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்ற கிராமம் ஆகும். இதுவரைக்கு மூன்று பேர் யானைத்தாக்குதல்களால் உயிரிழந்தது மட்டுல்லாமல் எங்களது பயிர்களையும் வீடுகளையும் தினந்தோறும் நாசமாக்கிகுகின்றது. என்கின்றார் நிமலன் சாரதா. அவர் மேலும் தெரிவிக்கையில் ' எங்களது பிள்ளைகள் பாடசாலைக்கு மூன்றரை கிலோமீற்றர் கால்நடையாக காட்டுவழியாக அதுவும் யானைகளின் நடமாட்டம் மிக்க பாதையின் ஊடாக திக்கோடை பிரதான வீதியில் உள்ள பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் பிரத்தியேக வகுப்புகளுக்கு அந்திநேத்திலும் இரவு நேரத்திலும் செல்வது மிகவும் அச்சமாக உள்ளதாகவும் காட்டுயானைகளின் அச்சத்தின் மத்தியில் பாடசாலைக்கல்வியினை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இந்த கிராம மக்கள் அதிகமானவர்கள் தற்போது கல்லுடைக்கும் தொழிலை செய்பவர்கள். முன்னர் கல் குவாரிக்கு சென்று அந்த தொழிலினைச் செய்தவர்கள் இந்த யானைகளின் அட்டகாசத்தால் கல்க்குவாரியில் இருந்து சரளைக்கற்களை தங்களது வீட்டிற்கு ஏற்றிவந்து அதனை உடைப்பதாகுவம் இதனால் மேலதிகமாக செலவுகள் ஏற்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.


'எங்களுக்கு மிகவும் முக்கியமாக குடிநீர்ப்பிரச்சினையும் அன்றாட நீர்ப்பிரச்சினையும் உள்ளது. இதனால் காலையில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு குளிப்பதற்கு நீர் தேடி சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் செல்லவேண்டி இருக்கின்றது. அதிகாலையிலும் செல்ல முடியாத நிலை காரணம், காட்டுயானைகள் பற்றைகளில் மறைந்திருக்கும் என்கின்ற பீதியில் நேரம் தாழ்த்தி செல்வதனால் பாடசாலைக்கு பிந்தி செல்கின்ற நிலை ஏற்படுகின்றது. எங்களுக்கு வீடுகள் இல்லை. எனது கணவர் வன்செயலில் இறந்து விட்டார். நான் விறகு விற்றுத்தான் எனது மக்களை வளர்த்துள்ளேன். பலவாறான வீட்டுத்திட்டங்கள் இங்கே கொடுக்கப்படுகின்றது. அதில் எனக்கு எதுவிதமான வீடுகளும் தரப்படவில்லை.' என்று ராமக்குட்டி புவனேஸ்வரி தெரிவித்தார்.  

பல்வேறு குறைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த திக்கோடை – தும்பாலை கிராம மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படுமா? அவர்களுக்கு அன்றாட வாழ்க்கையின் அத்தியவசிய தேவைகள் எட்டாக் கனியாகவே மாறிவிடுமா? என்னும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் இக்கிராம மக்கள். 

திலக்ஸ் ரெட்ணம் - 

















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624946

Translate