கடந்த ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதுடன், பல மில்லியன் ரூபாய்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் தம்முடன் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
திருக்கோவில் பிரதேச சபையின் புதிய கட்டடம் மற்றும் சந்தைக் கட்டடத் திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகiயில்..
‘2008ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையான கிழக்கு மாகாணசபை ஆட்சியில் ஊழல் மோசடிகள் தவிர்க்கப்பட்டு, உரிய முறையில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் இந்த மாகாணத்தில் பாரிய அபிவிருத்திகளை கண்டிருக்க முடியும். அப்போதைய முதலமைச்சராக இருந்தவரும் தமிழர் ஒருவரே.
அவர்கள் மக்கள் நலனை கருத்திற் கொள்ளாது, அப்போதைய அரசாங்கத்தின் அடிவருடிகளாக இருந்து உழைப்பதை நோக்கமாக கொண்டு செயற்பட்டார்கள். மாகாணசபை ஆட்சி முறைமை யாருக்காக கொண்டுவரப்பட்டதோ, அவர்கள் நன்மை பெற முடியாத நிலை தற்போது கிழக்கில் உள்ளது.
கடந்தகால ஆட்சியின்போது, எவ்வித அதிகாரமுமின்றி வாழ்ந்த தமிழ் மக்களுக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் கூட முழுமையான அதிகாரத்தை வழங்கவில்லை. அவ்வாறு நடைபெற்றிருந்தால் தமிழர் ஒருவரே முதலமைச்சராக வந்திருக்க வேண்டும்.
அத்துடன், இரு பெரும் கட்சிகள் ஒன்றாக ஆட்சியை நடத்துகின்ற நாட்டில் மூன்றாவது நிலையிலுள்ள கட்சியே எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும். அதனையும் இந்த அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை.
தற்போதைய அரசாங்கத்தின் வெற்றிக்காக உழைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சுப் பதவிகளுக்கு அடிமைப்பட்டு செல்லாது. அவ்வாறு குறுகிய காலத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்று மக்களை ஏமாற்றவும் விரும்பவில்லை’ என்றார்.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான பி.தயாரட்ண, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரி.கலையரசன், எம்.இராஜேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


0 facebook-blogger:
கருத்துரையிடுக