சனி, 16 மே, 2015

சம்பூரில் தமது காணிகளை துப்புரவுசெய்ய சென்றவர்கள் பொலிஸாரினால் வெளியேற்றம்

திருகோணமலை மாவட்டம் சம்பூர்  பிரதேசத்தில்  மீள் குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட தமது காணிகளை துப்பரவு செய்ய சென்றிருந்த காணி உரிமையாளர்கள் இன்று சனிக்கிழமை பொலிஸாரால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


இந்த மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட காணி தொடர்பான ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவொன்று வெள்ளிக்கிழமை  வியாழக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை காரணம் கூறி பொலிஸார்  மக்களை வெளியேறு மாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகின்றது.

வழமைக்கு மாறாக அந்த பகுதியில் இன்றைய  தினம் பொலிஸாரை காணக் கூடியதாக இருந்தது என உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

சம்பூர்   பிரதேசத்தில்  818 ஏக்கர் காணி  முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால்  ஏற்கனவே 2012.05.17 அன்று வெளியிடப்பட்ட  முதலாவது  வர்த்தமானி அறிவித்தலின் படி கைத்தொழில் ஊக்குவிப்பு வலயமாக   பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

2012.07.19 திகதியிடப்பட்ட  மற்றுமோர் வர்த்தமானி  பிரகடனத்தில் அந்த காணிகள்  முதலீட்டு  ஊக்குவிப்பு  வாரியத்திடம் கையளிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இது தொடர்பாக  இம் மாதம் 7ம் திகதி  வெளியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம்  மகிந்த ராஜபக்ஸவினால் வெளியிடப்பட்டிருந்த   இந்த காணி சுவீகரிப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் தொடர்பான  இரு  வர்த்தமானி பிரகடனங்களும்  ரத்து செய்யப்பட்டுள்ளது.

குறித்த  காணியில் முதலீடு செய்வதற்கு எதிர்பார்திருந்த முதலீட்டு நிறுவனங்கள்   இதற்கு எதிராக  உயர் நீதிமன்றத்தில்  மனுவொன்றை தாக்கல் செய்திருந்தன.

இந்த மனுவை  பரிசீலித்த  உயர் நீதிமன்றம் நேற்று    வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்ய இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக விளக்கத்தை முன் வைக்குமாறு அரச சட்டவாதிகளை கேட்டுள்ள நீதிமன்றம் விசாரணையை  எதிர்வரும் வியாழக்கிழமை வரை ஒத்தி வைத்துள்ளது.



           

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate