புதன், 13 மே, 2015

கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு வெளிமாகாணங்களில் வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்து



ஆசிரியர் டிப்ளோமா பயிற்சியை  முடித்த கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு கிழக்கு  மாகாணத்துக்கு வெளியே வழங்கப்பட்ட அனைத்து நியமனங்களும் உடனடியாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக  கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு  தெரிவித்தது.

இது தொடர்பில் நேற்று புதன்கிழமை (13) கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'வெளிமாகாணங்களில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை சேர்ந்த குறிப்பிட்ட ஆசிரியர்களை உடனடியாக கிழக்கு மாகாணத்திலுள்ள அவரவர் மாவட்டங்களுக்கு மாற்றவேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் கல்வியமைச்சரை கேட்டிருந்தார்.


இந்த விடயம் தொடர்பில் நேற்று புதன்கிழமை (13)  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி ஆகியோர் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துடன்  கலந்துரையாடினர்.

இதன் பயனாக உடனடியாக அமுல்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்துக்கு வெளியே ஆசிரியர்களாக நியமனம் பெற்றுள்ள கிழக்கு மாகாணத்தவர்கள் அனைவருக்கும் கிழக்கு மாகாணத்துக்குள்ளேயே அவரவர் மாவட்டங்களில் நியமனம் வழங்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, வெளிமாகாணங்களில் நியமனம் பெற்றவர்கள் உடனடியாக தங்களது விவரத்தை (நியமனக் கடிதப் பிரதி உட்பட) கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். முதலமைச்சரின் மாவட்ட இணைப்பதிகாரிகளையும் மேற்படி விடயமாகத் தொடர்பு கொண்டு விவரங்களை  கையளிக்க முடியும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate