திங்கள், 23 நவம்பர், 2015

கல்முனையில் கட்டாக்கலி மாடுகளின் தொல்லை- விழிப்படைந்த மாநகர சபை!

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டாக்காலி மாடுகளை கைப்பற்றும் நடவடிக்கை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர முதல்வர் சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் அவர்களின் உத்தரவின் பேரில் கல்முனை மாநகர சபை இந்நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

இதன் பிரகாரம் கல்முனை பொதுச் சந்தையில் நடமாடிய 20 மாடுகள் இன்று அதிரடியாக கைப்பற்றப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த மாடுகள் யாவும் ஏலவே அளிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ஒரு மாட்டுக்கு 2000 ரூபா வீதம் தண்டப் பணம் அறவிடப்பட்டு இன்று  திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டதென மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.

தண்டப்பணம் அறவிடப்பட்ட பின்னர் விடுவிக்கப்படும் இம்மாடுகளை தமது சொந்த இடங்களில் வைத்து பராமரிக்கத் தவறும் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், அவை மீண்டும் கைப்பற்றப்பட்டு,  நீதிமன்ற அனுமதியுடன் அவை அரசுடமையாக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கல்முனை மாநகர பிரதேசங்களில் பிரதான வீதிகள், பொதுச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டங்களினால் பொது மக்களுக்கு பெரும் தொல்லையாக இருப்பதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. இதனால் வர்த்தகர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்திருந்தனர்.

இவற்றைக் கருத்தில் கொண்டே கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு அவற்றைக் கைப்பற்றி உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாநகர முதல்வர் ஆலோசனை வழங்கியிருந்தார் அதனைத் தொடர்ந்தே கட்டாக்காலி மாடுகளை கைப்பற்றியிருந்ததாக ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.


Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624942

Translate