திங்கள், 30 நவம்பர், 2015

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஆளுமையுள்ள தலைவர்கள் முடிவு காண வேண்டும்

இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக்காண நல்லாட்சி அரசின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
இதனை சாதாகமாக பயன்படுத்தி ஆளுமை மிக்க தலைவர்கள் என்பதை உணர்த்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட த.தே.கூ. எம்.பி. ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
இதற்குப் பின்னர் இந்த நாட்டில் இருந்த தலைவர்கள் அனைவரும் பிரச்சினையை வளர்த்துவிட்டார்களே தவிர எவரும் தீர்க்க முன்வரவில்லை. அந்த தவறை நீங்கள் செய்துவிக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
எத்தனையோ சவால்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் உங்களுக்கு வாக்களித்தது இதற்காகவே என்றும் அவர் தெரிவித்தார்.
வரவு - செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பராளுமன்றம் சபை 9.30க்கு ஆரம்பமானது. வரவு - செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான 6 ஆவது நாளில் விவாதம் ஆரம்பித்த போதே மட்டு. மாவட்ட எம்.பி. ஞானமுத்து ஸ்ரீநேசன் மேற்கண்டவாறு பேசினார். அவர் தொடர்ந்தும் பேசும் போது,
சிறைக் கைதிகள், காணாமல் போனோர், பட்டதாரிகளுக்கு தொழிலின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தமிழ் இளைஞர், யுவதிகள் கலக்கமடை ந்துள்ளனர்.
இந்த மனங்களில் விரக்தி ஏற்பட்டால் அது அவர்களை வித்தியாசமாக சிந்திக்க தூண்டுவதுடன் நாட்டில் மீண்டுமொரு போராட்டம் உருவாக காரணமாகிவிடும் எனவே அதற்கு இடமளிக்காத வகையில் நல்லாட்சி நல்ல சமிக்ஞைகளை வெளியிட வேண்டும். வரவு - செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக 14 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அவர் பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தின் இளைஞர், யுவதிகளுக்கு தொழிலின்மை பாரிய பிரச்சினைகயாகவுள்ளது. சுமார் 1800 பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர். அரசின் பாடத்திட்டத்திற்கமைய கலைபீடம் கற்ற மாணவர்கள் தொழில் வாய்ப்புக்கு உகந்தவர்கள் அல்ல என்று மறுதலிக்கப்படுகிறார்கள். அரசின் பாடத்திட்டத்தை படித்த இவர்களுக்கு தொழில் வழங்க வேண்டியது இந்த அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அதேபோன்று யுத்தத்தினால் மூடப்பட்ட வாழைச்சேனை காகித தொழிற்சாலை, ஓட்டுத் தொழிற்சாலைகள், அரிசி ஆலைகள் ஆகியன மீள திறக்கப்படுவதன் மூலம் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பால் உற்பத்தி தொழிற்சாலை இல்லாமை பாரிய குறைபாடாகும். இதனை நிவர்த்தி செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும். கரடியனாறு விவசாய பண்ணை முழுமையாக இயங்க வேண்டும்.
மட்டக்களப்பு வெள்ளாவெளி, கோரளைப்பற்று ஆகிய பிரதேசங்களில் காட்டு யானைகளின் அராஜகம் பாரிய பிரச்சினையாகியுள்ளது. யானைகள் எவ்வளவு தான் அனர்த்தம் புரிந்தாலும் அதனை பாதுகாப்பதற்கு மட்டும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிற போதும் பாதிக்கப்படும் மக்கள் குறித்து எந்தவொரு திட்டமும் இதுவரை வகுக்கப்படாமை வருத்தமளிக்கிறது.
இதேபோன்று தமிழ் இளைஞர், யுவதிகள் சிறையில் வாடுவதும் தமிழர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தான் சட்டம் என்பது ஒரு சிலந்தி வலை. பலம் மிக்க மிருகங்கள் அதனை அறுத்துவிட்டு வெளியில் நடமாட பலவீனமற்ற ஐந்துகள் அதில் சிக்கி உயிரை மாய்த்துக்கொள்ளும். அதேபோன்று தான் பாரிய குற்றம் இழைத்தவர்கள் வெளியிலும் சிறிய குற்றம் இழைத்தவர்கள் சிறையிலும் உள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.
யுத்தம் காரணமாக காணாமல் போனோர், கடத்தப்பட்டோர், அங்கவீனர்கள், உயிரிழந்தோர், விசேட தேவையுடையோர் களுக்கு நல்லாட்சியின் கீழ் வசந்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
தமிழ் மக்கள் தாமும் பிறரைப்போல் இயல்பு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டே பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வாக்களித்தார்கள். இவர்கள் இனிமேலும் இந்த அரசாங்கத்தினால் ஏமாற்றப்படக்கூடாது.
இலங்கையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டவை யாவும் ஏமாற்று ஒப்பந்தங்களாகும். இதே நிலை மீண்டும் தொடரக்கூடாது.

கே. அசோக்குமார்,
லக்ஷ்மி பரசுராமன்
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624950

Translate