பாராளுமன்றத்திற்குச் சென்று மக்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுவது பாராளுமன்ற உறுப்பினர்களது முக்கிமான கடமை எங்களுடைய பாராளுமன்றத்தில் எத்தனைபேர் சட்டத்தை இயற்றுகின்ற தகுதியோடு இருக்கிறார்கள் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் பண்ணையார்களுக்கு மானிய விலையில் பசு மற்றும் எருமை மாடுகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
“எமது உரிமைகளை பெற்றேடுக்க வேண்டும் என்ற ரீதியில் கடந்த காலங்களில் தமிழ் தேசியகூட்டமைப்பு எதிர்கட்சியாக இருந்து செயற்பட்டுவந்தோம். தற்போது நாங்களும் சேர்ந்து ஆட்சியை ஏற்படுத்தியுள்ளோம். இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கு பல சதிகள் நடைபெறுகின்றன. எங்களுடைய செயற்பாடுகள் கவிழ்ப்பவர்களுக்கு ஆதரவாக இருக்குமானால் அவர்கள் ஆட்சியை கவிழ்த்துவிட்டால் எமது பிரச்சினைகளை யாரிடம் கூறப்போகிறோம்.
60 மேற்பட்ட ஆண்டுகளாக நாங்கள் அனுபவித்த துன்பங்களை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்லப் போகின்றோமா? ஆல்லது தற்போது இருக்கின்ற நிலமையை மிகவும் அவதானத்துடனும் சாதுரியத்துடனும் எமது பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி தீர்வுகாண வேண்டும்.
எமது பிரச்சினைகள் பல இடங்களிலும் உன்னிப்பாக கவனிகக்ப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் எங்களுடைய நடவடிக்கைகள் எல்லாம் அவதானித்துக்கொண்டிருக்கிறார். ஏங்களுடைய சமூகத்திற்கு நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்கக் கூடிய வகையில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்.
எங்களுடைய உரிமைகள் பெரும்பான்மை இன அரசியல்வாதிகளின் கைகளில் அகப்பட்டிருக்கின்றன அதனை நாங்கள் நிதானமாக செயற்பட்டு பெற்றுக்கொள்ள வேள்ளவேணடும். எங்களுடைய பிரச்சினைகளை உணரும்வகையில் நிலமைகளை ஏற்படுத்த வேண்டும். மத்தியில் இருக்கின்ற அரசாங்கத்துடன் சரியான முறையில் அணுகி எமது உரிமைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.
ஆசிய நாடுகளில் அரசியல் இருக்கும் நிலையினைப் பார்க்கும் போது நாங்கள் ஏன் அரசியலுக்கு வந்தோம் என நினைக்கிறோம். மக்களுக்கு சேவைசெய்யக் கூடிய முக்கியமானதொரு இடம் அரசியல். ஆனால் இந்த அரசியலை கள்வர் குகையாக்குவதற்கும் அதிலே வாசியானவர்கள் வாழ்ந்துகொள்வதற்குமாக சிலர் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மேற்குலக நாடுகளில் அரசியல்வாதிகள் பிரபல்யமாகவிருக்க மாட்டார்கள்.
திட்டங்களை கொள்கை ரீதியில் வகுத்து பாராளுமன்றத்தில் அல்லது மாகாணசபையிலிருந்து நிதியினையெடுத்து அதிகாரிகளிடம் கொடுப்பதுதான் அரசியல்வாதிகளின் பொறுப்பு.
பாராளுமன்றத்திற்குச் சென்று மக்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுவதுதான் பாராளுமன்ற உறுப்பினர்களது முக்கிமான கடமை. எங்களுடைய பாராளுமன்றத்தில் எத்தனைபேர் சட்டத்தை இயற்றுகின்ற தகுதியோடு இருக்கிறார்கள்.
அரசியல்வாதிகள் குப்பை வேலைகளை செய்யக்கூடாது மக்களுக்கு என்ன செய்தி சொல்லப்படவேண்டும் என்பதை ஆயத்தமாக்கிக்கொண்டு செல்ல வேண்டும் வேலிக்கு மறுபுறத்தில் நின்று சன்டைபிடிக்கின்ற சில்லறைத்தனமான அரசியல் செய்யக்கூடாது. ஒர் அரசியல்வாதி அவ்வாறு செயற்படுகிறார் என்றால் மற்றவர்களும் அவ்வாறு செயற்பட வேண்டும் என மக்களும் எதிர்பார்க்க கூடாது” என்றார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக