ஞாயிறு, 29 நவம்பர், 2015

மட்டு தமிழ் தேசிய மன்றத்தின் உருவாக்கம் கட்சிப் பிளவு இல்லை. பா.அரியம்


(பழுவூரான்)

மட்டக்களப்பில் மாவீரர் நாளில் புதிய அமைப்பான மட்டக்களப்பு தமிழ் தேசிய மன்றம் உருவாக்கப்பட்டு அதனுடாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு 27.11.2015 அன்று பா.உ. சீ.யோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் அவரின் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், மற்றும் பொன்.செல்வராசா, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மற்றும் மாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். 


கடந்த காலங்களில் மாவீரர் நாள் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். அதற்கு மாறாக இம்முறை பா.உ. சீ.யோகேஸ்வரனின் அலுவலகத்தில் இடம்பெற்றமையும், ஏனைய அரசியல் வாதிகள் கலந்து கொள்ளாமையும் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியிருந்தது மட்டுமல்லாமல் தம்pழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கின்ற உட்பூசல்கள்தான் தமிழ் தேசிய மன்றத்தின் உருவாக்கமோ? என்ற பெரும் சர்ச்சையும் மக்களிடையே ஏற்பட்டிருந்தது. இதனை நிவர்த்தி செய்வதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இத் தேசிய மன்றத்தினை உருவாக்கியவருமான பா.அரியநேந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'இந்த மட்டக்களப்பு தமிழ் தேசிய மன்றமானது எந்தவிதமான கட்சி தொடர்புமின்றி நேற்றைய தினம் உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலம் நினைவு கூறப்படவேண்டிய நிகழ்வுகள் நடாத்தப்பட முடியாமல் போனால் இம்மன்றத்தினூடாக அதனை நிகழ்த்துவதற்காவே இது உருவாக்கப்பட்டது'. அவர் இது பற்றி மேலும் கருத்து கூறுகையில்,


மாவீரர் நாளானது தமிழ் மக்களுக்கு ஒரு புனித நாளாகும். அதனை ஒவ்வொரு தமிழனும் உணர்வுடன் செய்யவேண்டியது தலையாய கடமையாகும். ஆகவேதான் நான் ஒவ்வொரு வருடமும் இதனை நினைவு கூறுவது வழக்கம். அது இம்முறையும் எந்தவொரு மட்டக்களப்பு பாரளுமன்ற உறுப்பினர்களோ அல்லது மாகாண சபை உறுப்பினர்களோ அதனை முன்னெடுத்து செயற்படுத்த முன்வரவில்லை. நான் நேற்றைய தினம் இறுதி நேரத்தில் பிற்பகல் 3.00 மணியளவில் நானே அதனை முன்னெடுக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியபோது பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்கள் தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்ட போது இது பற்றி கலந்துரையாடினேன். அவர் தனது அலுவலகத்தில் இந்நிகழ்வை செய்வோம் என்று கூறினார். அதன்படி நாங்கள் முன்னெடுக்க இருந்த போது அங்கு சமூகமளித்திருந்த அரசியல் வாதிகளுக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை. அவர்களே என்னை தொடர்பு கொண்டு கேட்ட போது நான் இவ்வாறு இந்த மாவீரர் நினைவேந்தல் நிகழ்வினை ஒழுங்கு செய்துள்ளோம் என கூறிய போது அவர்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்களே தவிர நான் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறினார். வழமையாக தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெறுவது தான் வழக்கம். அதனை இம்முறை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் முன்னெடுக்காத பட்சத்தில் தான் நான் இவ்வாறானதொரு அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் இந்நிகழ்வை செய்தேன். கட்சி சார்பாக இந்நினைவேந்தலை நான் முன்னெடுக்க முடியாது. காரணம், நான் அதற்கான அனுமதியினை தலைமைகளிடம் பெற்ற பின்பே முன்னெடுக்கலாம். இது கட்சி பிளவோ அல்லது கட்சியின் உட்பூசலின் விம்பNமுh இல்லை. இதன்மூலம் நான் எந்தவிதமான அரசியல் இலாபத்தினையும் பெற முயற்சிக்கவில்லை என்றும் கூறினார்.
பழுகாமம் நிருபர்.



Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate