புதன், 25 நவம்பர், 2015

வாழ்வில் இருள் அகன்று ஒளி பிரகாசிக்க வேண்டும் : கார்த்திகை விளக்கீடு

திருவண்ணாமலை என்றவுடன் உலகில் வாழும் அனைத்து இந்துக்கள் மனதிலும் தோன்றுவது அங்கே கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் வரும் தினத்தில் அனுஷ்டிக்கப்படும் திருக்கார்த்திகை தீப ஒளி எனலாம். திருக்கார்த்திகைத் திருநாள் குமாராலய தீபத் திருநாள் எனப்படும். இந்த திருக்கார்த்திகையின் பெருமையை சம்பந்தர் இவ்வாறு கூறுகின்றார்.
வனைக்கை மட நல்லார்
மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்
தொல் கார்த்திகை நாள்
தளத்தேந் தினமுலையார்
தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே
போதியோ பூம்பாவாய்

இவ்வாறு தனது தேவாரப் பதிக்கத்தில் தெளிவுறக் கூறியிருப்பதை நாம் உணர்வோம்.
ஒளியே மூல வடிவம். இப்புவியில் சகல உயிரினங்களின் வாழ்விற்கும் ஒளி தேவைப்படுகின்றது. ஒளியின் பெருமைகளை இருள் சூழ்ந்தவுடன் தான் உணர முடியும்., எமது இந்து மதமானது மனித குல நல்வாழ்விற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் என பல்வேறு விரதங்களையும் பண்டிகைகளையும் ஏற்படுத்தி வழக்கில் கொண்டுவந்துள்ளது.
கலியுகத்தில் மனிதன் அக இருளாலும் மாயையாலும் சூழப்பட்டு முட்டி மோதி அழிந்து வருகின்றான். இயற்கையினை அழித்து வருகின்றான். இவற்றிலிருந்து விடுதலை பெற வலியுறுத்துவதே தீப ஒளியான விளக்கீடு ஆகும். அக இருளை மனிதன் களைந்து மனதினில் நல்லொளி மேலோகி வாழவேண்டும் என எடுத்துக் கூறுகின்றது.
இந்த கார்த்திகை விளக்கீடு பொதுவாக மூன்று தினங்கள் நிகழும் சமயச் செயற்பாடுகளான திருக்கார்த்திகை விரதம், சர்வாலய தீபம், வீடுகளில் தீபம் ஆகியவைகளுடன் மறுநாள் விஷ்ணு ஆலய தீபமும் கொண்டாடப்படுகின்றது. ஆனால் இம்முறை விஷ்ணு ஆலய தீபத்தை தவிர மற்றயவைகள் என்று அனுஷ்டிக்கப்படுகின்றன. இன்று பூரணை விரதம் உள்ளதால் சகல அனுஷ்டானங்களையும் செய்வதற்கு உகந்த நாள்.
இந்த கார்த்திகை தீபம் தோன்றிய வரலாறுள் பலவாறு சொல்லப்பட்டிருக்கின்றன. ஆணவத்தை அழிக்க சிவன் அவதரித்த வரலாறுகள் பின்வருமாறு சொல்கின்றன. தேவர்கள் சிவபெருமானை வேண்டி கடும் தவம் புரிந்து பல்வேறு வரங்களைப் பெற்றுக் கொண்டு மமதையினால் மயக்கமுற்று தமது செற்பாடுகளை மறந்து உறங்கியும் ஆடியும் பாடியும் மகிழ்ந்திருந்தனர்.
அவ்வேளை சிவன் உடல் தள்ளாத வயோதிப உருவம் பூண்டு அங்கு சென்று எல்லோரையும் அழைத்து “எனது எதிரே ஒரு துரும்பு உள்ளது என்னால் முடியாது அதை எடுக்க நீங்கள் இதை எடுத்து தாருங்கள்” கூற அவர்களாலும் முடியாமல் போக (தேவர்கள்) தனது ரூபத்தை ஒளிப்பிளம்பாக்கி காட்சி கொடுத்த நாள் பெளர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் கொண்ட கார்த்திகை மாதம் ஆகும்.
மற்றுமொரு கூற்றுப்படி பரமேஸ்வரனும் பரமேஸ்வரியும் திருக்கைலையில் இருக்கும் போது அங்கே இருந்த நெய் விளக்கில் எண்ணெய் குறைந்து ஒளியானது மங்கிக் கொண்டு வருகின்றது.
அத்தருணத்தில் அங்கு வந்த ஒரு எலி சடுதியாக அதை தூண்ட ஒளிபிரகாசிக்க அதை கண்ணுற்ற சிவபெருமான் அதற்கு மறு அவதாரம் கொடுத்து அருளினார். இந்த எலி பூலோகத்தில் பிறந்து மகாபலி சக்கரவர்த்தியான முஜிபிண்ட சக்கரவர்த்தியாக திகழ்ந்தது. அரசன் எல்லோருக்கும் சக்கரவர்த்தியாக உள்ளதால் ஆணவம் தலைவிரித்தாடியது.
இந்த ஆணவத்தினால் ஒரு நாள் ஆலய தீபத்தினால் உடலில் தீக்காயம் பட்டு மீண்டும் தனது தவறை உணர்ந்து நடந்துகொண்டதுடன் பல ஆலயங்களை கட்டுவித்தும் ஆலய தொண்டுகள் செய்தும் வாழ்ந்து வந்தார்.
ஒருவருக்கு ஆணவம் அழிவைத்தரும். அன்பு ஒன்றே நிலையானது. இதை எமது சகோதர புத்த மதமும் போதிக்கின்றது.
இந்த இனிய தீப ஒளி நாளில்நம் உள்ளத்தில் அகல் விளக்கின் பிரகாசம் போல் இருளை அகற்றி ஒளியை ஏற்றி பக்திச் சுடரை படரவிட்டு இனிய நல்வாழ்வு வாழவேண்டும். சகல இல்லங்களிலும் இன்று இருள் நீங்கி நல்லொழி பிரகாசிக்கட்டும். நாடும் நாமும் நல்வாழ்வு வாழ்வோம்.

ஆர். நடராஜன்
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624937

Translate