செவ்வாய், 24 நவம்பர், 2015

உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டு மாடுகள் விடுவிப்பு


கல்முனை பொதுச் சந்தையில் கைப்பற்றப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த 41 மாடுகளும் அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து தண்டப்பணம் அறவிடப்பட்ட பின்னர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன. 


குறித்த மாடுகள் மீண்டும் பொது இடங்களில் நடமாடுமாயின் அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், அவை மீண்டும் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் அரசுடமையாக்கப்படும் எனவும் இதன்போது உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 



கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டாக்காலி மாடுகளை கைப்பற்றும் நடவடிக்கை கடந்த சில தினங்களாக மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 



இதன் பிரகாரம் கடந்த ஞாயிறு, திங்கள் ஆகிய இரு தினங்களிலும் கல்முனை பொதுச் சந்தையில் நடமாடிய 41 மாடுகள் அதிரடியாக கைப்பற்றப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்தன. 



இந்த மாடுகள் யாவும் மாநகர சபை சட்ட விதிகளின் பிரகாரம் அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ஒரு மாட்டுக்கு தலா 2000 ரூபா வீதம் தண்டப் பணம் அறவிடப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளன. 



இந்நடவடிக்கை தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார். 



கல்முனை மாநகர பிரதேசங்களில் பிரதான வீதிகள், பொதுச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டங்களினால் பொது மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் அவை பெரும் தொல்லையாக இருப்பதுடன் அன்றாடம் விபத்துக்களும் நிகழ்கின்றன. 



இவற்றைக் கருத்தில் கொண்டே கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு அவற்றைக் கைப்பற்றி உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநகர முதல்வர் வழங்கிய உத்தரவின் பிரகாரம் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது என ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார். 
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624948

Translate