இனம், மொழி வாழவேண்டுமாக இருந்தால் முதலில் நிலம் அவசியம். அதனைப் பாதுகாக்க வேண்டுமென கிழக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால் நடை, உற்பத்தி அபிவிருத்தி, அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் அனுசரணையுடன் பி.எஸ்.டீ.ஜீ நிதி உதவியுடனும் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட விவசாய வீதியினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
இந்த நாட்டில் ஜனவரி 8 ஆம் திகதி தமிழ் மக்களால் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தின் காரணமாக த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாகாண அமைச்சு சார்ந்த விடயத்தில் முழு மனதுடன் வேலை செய்யக்கூடிய நிலை உருவானது என்பதனை கூறியே ஆகவேண்டும்.
இலங்கை நாட்டில் தமிழர்களாகிய நாம் ஆட்சித்துறையில் பங்கு பற்றாமல் நீண்ட காலமாக விலகி இருந்தோம். அதனை மாற்றி எதிர்காலத்தில் நாங்களும் ஆட்சியாளர்களாக மாறவேண்டும்.
அதன் ஒரு கட்டமே இன்று கிழக்கு மாகாணசபையில் ஆட்சியாளர்களாகவும், மத்திய அரசாங்கத்தில் ஆட்சிக்கு அண்மித்த நிலையிலும் வரலாற்றில் இரண்டாவத தடவையாக எதிர்க்கட்சியாகவும் இருக்கின்றோம்.
தற்போதைய அரசு தேசிய அரசாங்கமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதனுடைய பலாபலன்களை தமிழ் மக்கள் அனுபவிப்பதோடு நிறுத்திவிடாமல் தொடர்ந்தும் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்படவேண்டும்.
இந்த நாட்டிலே சிறுபான்மை இனங்களாக இருந்த தமிழ், முஸ்லிம் இனத்தவர்களாகிய நாங்களும் சரி நிகராக வாழவேண்டும் என்ற கோசத்தினை 1955, 56, 60 காலப்பகுதியில் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் எழுப்பினார்கள்.
அதன்காரணமாக தந்தை செல்லா, தமது உறுப்பினர்களுடன் சம்மாந்துரைக்கு வந்து இங்குள்ள முஸ்லிம் மக்களுடன் சேர்ந்து எளிச்சியை ஏற்படுத்தினார்கள்.
இனம், மொழி வாழவேண்டுமாக இருந்தால் நிலம் அவசியம். அந்த நிலம் தொடர்பாக பிரதேசத்தில் இருக்கக்கூடிய மக்களை சிறுபான்மையினராக ஆக்கக்கூடிய நிலமை வருமானால் நாங்கள் எங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்கின்ற செய்தியினை தமிழ்த் தலைவர்கள் முஸ்லிம் தலைவர்களுக்கு சொன்னார்கள்.
1961 இல் மொழி தொடர்பான போராட்டம் கச்சேரியில் மறியல் போராட்டமாக நடைபெற்றபோது முஸ்லிம் பெண்களும் முக்காட்டைப்போட்டுக்கொண்டு போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்பதற்கு புகைப்படச்சான்றுகள் உள்ளன.
அந்த அளவிற்கு தமிழ் முஸ்லிம் மக்கள் தமிழ் பேசும் இனம் என்ற ரீதியில் வாழ்ந்திருக்கின்றார்கள்.
ஆனால் காலம் எம்மை வேறு ஒரு பக்கமாக புறட்டிப்போட்டது. இதன் காரணமாகத்தான் 30 வருடங்களாக நாங்கள் நெருப்பாற்றில் நீந்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம். என்பது ஒரு துன்பியல் சார்ந்த விடயமாகும்.
த.தே.கூட்டமைப்பினை பொறுத்தவரையில் எதிர்காலத்தில் (2016 இல்) நிலையான ஒரு தீர்வை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்காக நாங்கள் நிதானமாக செயற்படவேண்டும என்றார்.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால் நடை, உற்பத்தி அபிவிருத்தி, மீனடபிடி கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்களும் விநியோகத்திற்குமான அமைச்சரும் சட்டத்தரணியுமான கி.துரைராஜசிங்கம், கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன் விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள், போதனாசிரியர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



0 facebook-blogger:
கருத்துரையிடுக