திங்கள், 30 நவம்பர், 2015

நாட்டில் இனவாத, மதவாத ரீதியாக செயற்பட்டுவரும் அமைப்புகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் : எஸ்.வியாழேந்திரன்


நாட்டில் இனவாத, மதவாத ரீதியாக செயற்பட்டுவரும் அமைப்புகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சபையில் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நாட்டில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு இனவாதமும், மதவாதமும் காரணமாகவுள்ளன. இனங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் முரண்பாடுகளை மோதல்களை ஏற்படுத்துவதற்கென்றே இனவாத, மதவாத அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. எனவே, இனங்களுக்கிடையிலான மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், இவ்வாறான அமைப்புகளைத் தடைசெய்ய வேண்டும். இனவாதம், மதவாதத்துக்கு எதிராக கடந்த காலத்தில் போராடிய மனோ கணேசன் இன்று தேசிய கலந்துரையாடல் அமைச்சராக இருப்பதால் இவ்வாறான அமைப்புகளைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இராணுவத்தினருக்கு வழங்கப்படுகின்ற சலுகைகள் போராளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் - வியாழேந்திரன்
மொழி ரீதியிலான பிரச்சினையே இன ரீதியிலான பிரச்சினைக்கு வித்திட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மொழி ரீதியிலான பிரச்சினை, இன ரீதியிலான பிரச்சினையாக மாற்றமடைந்து பாரிய யுத்தத்தை உருவெடுத்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இன்றும் சிங்கள மொழி தெரியாதவர்களே அதிகளவில் இருப்பதாக சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், அரச நிர்வாகத்தினுடைய ஆவணங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்கள் நாளாந்தம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், போக்குவரத்து பொலிஸாரினால் வழங்கப்படுகின்ற போக்குவரத்து குற்றப் பத்திரிகை கூட சிங்கள மொழியில் இருப்பதாகவும், அதனை வாசித்து புரிந்துக் கொள்ள முடியாத நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் வியாழேந்திரன் கூறியுள்ளார்.
மேலும், அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவுத்திட்டத்தில் கூட அதிகளவிலான தமிழ் பிழைகள் இருப்பதனை நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, யுத்தம் நிறைவு பெற்றும் இன்று வரை மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், பல பாடசாலைகள் இன்றும் இராணுவ முகாம்களாக இருப்பதாகவும், அதனை விடுவிக்கக்கூட அரசாங்கம் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனியார் காணிகள் இன்னும் மக்களுக்கு ஒப்படைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், அவர்களுக்கான காணிகளை உரிய வகையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 90000 விதவைகள் இருப்பதாகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்ட போதிலும், புனர்வாழ்வளிக்கப்பட்ட 12000 பேராளிகளுக்கு எவ்வித சலுகைகள் இன்னும் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624937

Translate