மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வேலைத் திட்டங்களை ஜனாதிபதி தலைமையில், பிரதமரின் வழிகாட்டலில் செய்து வருகின்றேன் என்று வீடமைப்பு மற்றும் சமூர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
சமூர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் திரிய சவிய கடன் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் சுயதொழிலுக்கான வாழ்வாதாரக் கடன் வழங்கும் திட்டத்தின் ஊடாக வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பயனாளிகளுக்கு கடனுதவியும், உயர் வகுப்பு மாணவர்களுக்கான சிப்தொர புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்விலும் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மட்டக்களப்பு மாவட்டம் வறுமைக் கூடிய மாவட்டமாகவும், போதைப் பொருள் பாவனையாளர்கள் அதிகமாகவுள்ள மாவட்டமாகவும் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
போதைப் பொருள் பாவனை அதிகரித்து காணப்படுவதால் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை அதிகரித்துக் காணப்படுகின்றது. உழைப்பு இல்லாமல் அல்லது கிடைக்கின்ற சிறிய உழைப்பை போதைப் பாவனைக்காக செலவு செய்கின்றமையே இதற்காக காரணமாகும்.
இந்த மாவட்டத்தில் இருந்து போதைப் பொருள் பாவனையையும் வறுமையையும் இல்லாமல் செய்வதற்கு இந்த மாவட்டத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும் அப்போது தான் அதில் வெற்றி கிடைக்கும்.
வாகரை பிரதேச செயலக பிரிவின் திவிநெகும முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி.தேவமனோகரி பாஸ்கரன் தலைமையில் வாகரை மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரட்னம், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.கே.முஹைதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கான கடன் உதவித் தொகையும் ,சிப்தொர புலமைப்பரிசில் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.
இதன்போது வாகரை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள நாற்பது திவிநெகும பயனாளிகளுக்கு இருபது இலட்சம் ரூபாவும், உயர்தரவகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதாந்தம் ஆயிரம் ரூபா வீதம் இருபத்தி இரண்டு மாதத்திற்கான பணமாக ஒவ்வொரு மாணவருக்கும் இருபத்திரெண்டாயிரம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டதாகவும் வாகரை பிரதேச செயலகப்பிரிவின் திவிநெகும முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி.தேவமனோகரி பாஸ்கரன் தெரிவித்தார்.
கோறளைப்பற்று சமூர்த்தி பயனாளிகளுக்கான திரியசவிய கடனுதவி வழங்கும் நிகழ்வு
சமூர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் திரிய சவிய கடன் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் சுயதொழிலுக்கான வாழ்வாதாரக் கடன் வழங்கும் திட்டம் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பயனாளிகளுக்கும்,உயர் வகுப்பு மாணவர்களுக்கான சிப்தொர புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வும் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.நவேஸ்பரன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமூர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.
அதிதிகளாக திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரட்னம், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.கே.முஹைதீன், வாழைச்சேனை கோறளைப்பற்று திவிநெகும பணிப்பாளர் திருமதி.கே.கலைராணி, திவிநெகும வங்கி முகாமையாளர் திருமதி.கே.லதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உதவித் தொகையும் , உயர்தரவகுப்பு மாணவர்களுக்கான சிப்தொர புலமைப்பரிசில் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அறுபத்தைந்து திவிநெகும பயனாளிகளுக்கு அறுபத்தைந்து இலட்சம் ரூபாவும், உயர்தரவகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதாந்தம் ஆயிரம் ரூபா வீதம் பதினாறு மாதத்திற்கான பணமாக ஒவ்வொரு மாணவருக்கும் பதினாராயிரம் ரூபாவும் வழங்கப்பட்டது.









-
0 facebook-blogger:
கருத்துரையிடுக