செவ்வாய், 12 மே, 2015

காசோலைகள் மோசடி தொடர்பில் சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சரீரப்பிணையில் விடுதலை

சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  இணைப்பாளருமான அருண் தம்பிமுத்து, இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


தமிழ் வர்த்தகர் மற்றும் முஸ்லிம் சட்டத்தரணி உட்பட மூவரிடம் காசோலைகள்  மோசடி தொடர்பான குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டார். குறித்த மூவரிடமும், இவர் கொடுத்து வங்கியில் பணம் இன்றி திரும்பிய86 இலட்டசத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மூன்று காசோலைகள் உள்ளதாக என தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு நீதவான் என்.எம்.எம்.அப்துல்லா முன்னிலையில் இன்று மாலை மட்டக்களப்பு விசேட குற்றப் புலன் விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் ஆஜர்செய்யப்பட்டார். இதன்போது இவருக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதில் முதலாவது வழக்குக்கு தலா 20 இலட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளிலும், இரண்டாவது வழக்குக்கு தலா 50 இலட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளிலும் மூன்றாவது வழக்குக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.

பிரபல கட்டிட ஒப்பந்தகாரர் வி.றஞ்சிதமூர்த்தியிடம் கடனாக பெற்றிருந்த  20 இலட்சம் ரூபாய்க்கு வழங்கப்பட்ட காசோலை காத்தான்குடியைச் சேர்ந்த சட்டத்தரணி  எம்.ஐ.நூர்தீன் என்பவரிடம் காணி கொள்வனவு தொடர்பாக வழங்கப்பட்ட 45 இலட்சம் ரூபாவுக்குரிய காசோலை மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த முகமது முஸ்தபா முகமது சஜீத் என்பவரிடமும் காணி கொள்வனவு தொடர்பாக வழங்கப்பட்ட  21 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா  பெறுமதியான காசோலை ஆகியன குறித்த காசோலைகள் வங்கியில் பணம் இன்றி திரும்பியுள்ளன.

இது தொடர்பாக  உரிய நபர்களினால் முறைப்பாடுகள் செய்யப்பட்டதையடுத்தே அருண் தம்பிமுத்து மட்டக்களப்பு விசேட குற்றப் புலன் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate