சனி, 7 நவம்பர், 2015

3வது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு சுமுகமான முறையில் இடம்பெறுகின்றது

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் 334 பிரதேச செயலகங்களில் இன்று 07 சனிக்கிழமை இடம்பெற்று வருகின்ற மூன்றாவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு தற்போது காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.

மேற்படி இளைஞர் பாராளுமன்றத  தேர்தலில் வாக்களிக்க இளைஞர்,யுவதிகள் ஆர்வமாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பதை அவதானிக்க முடிகின்றது.

இத் தேர்தலில் கடமையில் காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதோடு சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளரும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இவ் இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கு காத்தான்குடி பிரதேசத்திலிருந்து காத்தான்குடி இஸ்ஸத் இளைஞர் கழகம் சார்பாக முஹம்மத் பதூர்தீன் முஹம்மத் சம்ஹான் யூஸ் இளைஞர்  கழகம் சார்பாக முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் சிஹாப் ஆகிய இருவரும் போட்டியிடுவதாகவும் ,காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 1252 இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.ஸமீலுல் இலாஹி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக மாவட்டத்தில் 32 வேட்பாளர்கள் இத் தேர்தலில் போட்டியிடுகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 18607 இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு தொகுதியில் மட்டக்களப்புகாத்தான்குடிஏறாவூர்,ஆரையம்பதி,வவுணதீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து ஒரு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate