கராத்தே கல்லூரியில் கல்வி பயிலும் கறுப்பு பட்டி மாணவர்களின் நிதி உதவி மூலம் திருகோணமலை ஈச்சிலம்பற்று கல்விக் கோட்டத்தில் கல்வி பயிலும் 30 வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மாவடிச்சேனை அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் 16 வறிய மாணவர்களுக்கும், கல்லடி மாலநீலியம்மன் வித்தியாலயத்தில் 12 வறிய மாணவர்களுக்கும், பூநகர் திருவள்ளுவர் வித்தியாலயத்தில் 02 வறிய மாணவர்களுக்குமாக ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 30 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மாவடிச்சேனை அரசினர் தமிழ் கலவன் வித்தியாலய அதிபர் இரா.சச்சிதானந்தம் தலைமையில் இவ்வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன்,
அதிதிகளாக வெருகல் பிரதேச செயலாளர் மா.தயாபரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் செ.லோகராஜா, சங்காரவேல் பவுண்டேசன் இணைப்பாளர் எஸ்.பிறேமானந், கதிரவெளி விக்கேஸ்வரா வித்தியாலய அதிபர் நா.சந்திரலிங்கம், பிரதேச பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இவ் உதவி வழங்கும் நிகழ்வு லண்டன் சிவன் கோயில் அறக்கட்டளை நிதியத்தின் தொடர்புபடுத்தலுடன், வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் கல்வி மேம்பாட்டுச் சபை ஒருங்கமைப்பு செய்திருந்தது.
அண்மையில் லண்டன் சிவன் ஆலயத்தின் உபதலைவர் சி.சோமசேகரம் மூலம் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நிதி உதவி ஊடாக பூநகர் திருவள்ளுவர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 10 வறிய மாணவர்களுக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக