பாதசாரிகள் கடவையூடாக வீதியை கடக்காது விதிகளை மீறிச் செயற்படும் பாதசாரிகளுக்கு தண்டனையாக அபராதம் அறவிடப்படும் என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரி ஏ.எல்.அமிலகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு போக்குவரத்து ஒழுங்கு தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், முச்சக்கர வண்டியின் பின் ஆசனத்தில் மூன்று பேருக்கு அதிகமானோரை ஏற்றிச்செல்லக் கூடாது எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. ‘முச்சக்கரவண்டிகளின் பின் ஆசனத்தில் 03 பேருக்கு அதிகமாக ஏற்றிச்செல்லக் கூடாதென்ற போக்குவரத்துச் சட்டம் அமுலிலுள்ளது. ஆனால், காத்தான்குடி பொலிஸ் பிரிவில் முச்சக்கரவண்டிகளின் பின் ஆசனத்தில் மூன்று பேருக்கு மேல் ஏற்றிச்செல்வதை அவதானிக்க முடிகின்றது. இது போக்குவரத்துச் சட்டத்தை மீறும் செயலாகும். அவ்வாறு முச்சக்கரவண்டிகளின் பின் ஆசனத்தில் மூன்று பேருக்கு மேல் ஏற்றிச்சென்றால் தண்டம் செலுத்த வேண்டும்.
அல்லது நீதிமன்றத்தில் முச்சக்கரவண்டிச் சாரதியை கொண்டு ஆஜர்படுத்த வேண்டிவரும். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் போக்குவரத்து ஒழுங்குகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக