உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களிலேயே அதிகமாக ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெறுகின்றன. முதலில் உள்ளூராட்சி நிறுவனங்களில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக ஊடகங்களின் பங்களிப்பு முக்கியமானதாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் ஊழல் மோசடிகளைக் குறைப்பது தொடர்பாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் மாகாண சபைகளின் ஆணையாளர்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடந்து கூறுகையில்,
பொதுமக்கள் ஒரு வீட்டினை நிர்மாணித்துக் கொள்வதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வது உட்பட பல்வேறு அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு உள்ளூராட்சி மன்றங்களையே நாடவேண்டியுள்ளது. இதற்காக அவர்கள் இலட்சக்கணக்கில் இலஞ்சம் வழங்கவேண்டியுள்ளது. இல்லாவிட்டால் அவர்கள் இதற்காக பல வருடங்கள் கூட காத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கே அமைச்சில் விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவு சுயாதீனமாக இயங்குவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பும் தேவை. குறிப்பாக ஊடகங்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
பொதுமக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக உள்ளூராட்சி மன்றங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பப்படிவங்கள் கூட கவனத்திற் கொள்ளப்படாது வருடக்கணக்கில் தேங்கிக்கிடக்கின்றன.
இதனைத் தவிர்ப்பதற்காக வீட்டு நிர்மாண அனுமதிப்பத்திரம் போன்றன விண்ணப்பிக்கப்பட்டு குறிப்பிட்ட கால எல்லைக்குள் வழங்கப்பட வேண்டுமென அமைச்சு சுற்று நிருபங்கள் மூலம் உள்ளூராட்சி மன்றங்களைக் கோரவுள்ளன. அத்துடன் அமைச்சு அதற்கான கொள்கைத் திட்டங்களை வகுக்கவுள்ளது.
மேலும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் பலர் இன்று ஒப்பந்தக்காரர்களாக மாறியுள்ளனர். இதனால் மக்களுக்கு எதிர்பார்க்கும் சேவைகள் கிட்டுவதில்லை. ஒரு கோவையை மற்றோர் அதிகாரிக்கு கொண்டு சென்று கொடுப்பதற்கு கூட இலஞ்சம் வழங்க வேண்டியுள்ளது. இன்று சட்டவிரோத கட்டடங்கள் பாதைகளிலும் மற்றும் இடங்களிலும் நிர்மாணிக்கப்படுவதற்குக் காரணம் உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் மோசடிகளாகும்.
எனவே இவற்றைத்தடுத்து உள்ளூராட்சி மன்றங்களில் நல்லாட்சியையும் சிறந்த, நேர்மையான பணிகளையும் உறுதிசெய்வ தற்கும் இலஞ்சம் வழங்காமலிருப்பதற் கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவது தொடர்பாக பல செயற்றிட்டங்கள் முன் னெடுக்கப்படவுள்ளன என்றார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக