மிக நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் இன்று மீண்டும் சிறையிலேயே தஞ்சமடைய வேண்டிய நிர்கதிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
10 லட்சம் ரூபா விதமான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும், அவர்களை சிறையிலிருந்து பொறுப்பேற்பதற்கு எவரும் முன்வராமையினால் அவர்களை சிறையிலிருந்து வெளியேற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில், குறித்த 31 தமிழ் அரசியல் கைதிகளையும், சிறைச்சாலை அதிகாரிகள் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து சென்றனர்.
முதற்கட்டமாக 31 பேருக்கு பிணை
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் முதற்கட்டமாக 31 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று அவர்கள் ஆஜர்படுத்தப்படபோதே அவர்களுக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் என்ற அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை ஞாயிற்றுக்கிழமை தினத்தில் கொழும்பு அல்லது வவுனியா பொலிஸ் நிலையங்களில் அவர் கைச்சாத்திட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டு கட்டமாக 63 பேரை விடுதலை செய்வதாக தீர்மானிக்கப்பட்டு இன்று காலை 31 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கிடைக்கவில்லை என அரச சட்டத்தரணிகள் தெரிவித்ததை அடுத்து இந்த மாதம் 24ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து, குறித்த சிறைக் கைதிகள் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர்கள் இன்று பிற்பகல் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இதன்போதே 31 சிறைக் கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டது.
பிணை வழங்கப்பட்ட போதிலும், அவர்களை பொறுப்பேற்க யாரும் வருகைத் தராத காரணத்தினால் குறித்த சந்தேகநபர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக