தமிழ் அரசியல் கைதிகளை மைத்திரி அரசு மீண்டும் ஏமாற்றிவிட்டது எனவும் இது இனவாதத்தின் உச்சக்கட்டம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகள் 28 பேரை பிணையில் விடுதலை செய்வதாக நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்பட்டு சட்டமா அதிகாரியின் முடிவு இல்லையெனக் கூறி எதிர்வரும் நவம்பர் 24 வரை அவர்களை திரும்பவும் சிறைகளுக்கு அனுப்பப்பட்டமை தொடர்பாக கருத்துகூறிய அரியநேத்திரன்,
பிணையில் விடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களில் அநேகமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் நிமிர்த்தமாக சென்று நாடு திரும்பும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2013, கைது செய்யப்பட்டனர்.
உண்மையில் பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்ட எவரையும் இன்று நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லவில்லை என அவர் கூறியுள்ளார்.
ஆனால் ஏதோவொரு வகையில் அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவி கைதிகளையாவது பிணையில் விடுதலை செய்யாமல் திரும்பவும் கால நீடிப்பு செய்தமை முழு உலகத்தையும் ஏமாற்றும் செயலாகவே பார்க்க முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் தமிழ் தலைமைகளின் நெஞ்சில் முன்னாள் ஐனாதிபதி மகிந்த நேரடியாக குத்தினார். ஆனால் ஐனாதிபதி மைத்திரியோ தமிழ் தலைமைகளின் முதுகில் மறைமுகமாக குத்துகிறார் என்பது மிகத் தெளிவாக கோடிட்டு காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய தாம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக கடந்த 2004 ஆம் ஆண்டு தொடக்கம் பல தடவைகள் அனைத்து சிறைகளுக்கும் நேரடியாகச் சென்று, அவர்கள் விடுதலைக்காக பல முயற்சிகள் மேற்கொண்டோம். அப்போது ஏறக்குறைய 800 தமிழ் அரசியல் கைதிகள் இருந்தனர்.
அவர்களில் படிப்படியாக பலர் விடுதலை செய்யப்பட்டு தற்போது 217 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே உள்ளனர்.
இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் என ஐனாதிபதி மைத்திரி பாலசிறிசேனவிடம் இரா. சம்பந்தன் கடந்த 10 மாதங்களாக கதைத்த போதும் ஐனாதிபதி சிரித்துக்கொண்டே ஏமாற்றுவதை இந்த சம்பவம் தெளிவாகக் காட்டுகின்றது.
புதிய ஐனாதிபதி மைத்திரிக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு அவர் தந்த தீபாவளி பரிசு தமிழ் அரசியல் கைதிகளை ஏமாற்றியது.
எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வட கிழக்கு முழுவதும் மேற்கொள்ளும் பூரண ஹர்தால் கடையடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவை வடக்கு கிழக்கு வாழ் மக்கள் வழங்குமாறு அரியநேந்திரன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக