ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் வகிக்கும், எதிர்க் கட்சித் தலைவர் பதவி, பாராளுமன்ற பிரதிகுழுக்களின் பதவி என்பவற்றை துறக்க வேண்டும் என கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார்.
வடகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட பூரண ஹர்தால் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கருத்து கூறும்போதே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பினை ஏற்று இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யக்கோரி, வடகிழக்கு தாயகம் முழுவதும் இடம்பெற்ற முழுநாள் ‘பூரண ஹர்த்தால்’ கடையடைப்பு, பணிப்புறக்கணிப்புக்கு பங்களிப்பு செய்து ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.
தமக்கு விடுதலை வேண்டி சிறைகளில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் எமது இளைஞர்களுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்காலத்தில் முன்னெடுக்கும் சகல கவனயீர்ப்பு போராட்டங்களுக்கும் தொடர்ந்து ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குமாறும் வேண்டுகின்றோம்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஏற்கனவே மஹிந்த அரசு எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏமாற்றியதோ, அதுபோன்றே மைத்திரி அரசும் கூட்டமைப்பின் தலைமையை வாக்குறுதி வழங்கி ஏமாற்றியுள்ளது.
தலைவர் சம்பந்தன் ஐயாவிற்கு ஜனாதிபதிக்கு வழங்கிய உறுதிமொழி காப்பாற்றப்படாத நிலையில், வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான வடமாகாண அமைச்சர்களும் ஜனாதிபதி மைத்திரியுடன் கைதிகள் விடுதலையை வலுயுறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி வடமாகாண முதலமைச்சர் விக்கினேஷ்வரன் ஐயாவிடமும் வாக்குறுதி வழங்கியுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை பொதுமன்னிப்பு கொடுப்பதற்கான சாத்தியத்தை அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைமைகளை இரண்டு அணியாக ஐனாதிபதி சந்தித்தும் அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மைத்திரி செயல்படுத்த தவறுவாராயின், நல்லாட்சியில் பாராளுமன்ற பிரதி குழுக்களின் பதவி, எதிர்க்கட்சிதலைவர் பதவி தொடர்ந்தும் வகிக்கவேண்டுமா என்பதை தமிழ்தேசிய கூட்டமைப்பு மீள்பரிசீலனை செய்யவேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக