உலக நீரிழிவு நாள் (World Diabetes Day) உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் இத்தினம் ஐக்கிய நாடுகள் அவையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ள் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1921 இல் பிறட்ரிக் பான்ரிங் என்பவர் கண்டுபிடித்தார். இவரது பிறந்த தின நினைவாகவே இன்றைய நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது. சர்வதேச ரீதியில் ஏறத்தாழ 150 நாடுகளில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்நோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனத்தினாலும் உலக சுகாதார நிறுவனத்தினாலும் 1991 முதல் முறையாக நீரிழிவு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2012ம் ஆண்டு உலக நீரிழிவு நோய் தினம் நீரிழிவு நோய் பற்றிய கல்வி மற்றும் விழிப்புணர்வை மையப்படுத்தியுள்ளது. நீரிழிவு நோய் எனப்படுவது இன்சுலின் ஓமோன் உற்பத்தி குறைவடைவதால் இன்சுலின் ஓமோனுக்கான தடை அதிகரிப்பதால் உடலில் இன்சுலின் ஓமோன் செயற்படுவதற்கான ஆற்றல் குறைவடைகிறது. இக் குறைபாடானது நீரிழிவு நோய் எனப்படுகிறது;.
குருதியில் அதிக வெல்லநிலை உடல் உறுப்புக்களைச் சிதைவடையச் செய்வதால் உயிர் அச்சுறுத்தும் சிக்கல்கள் உருவாகுவதற்கு வழிவகுக்கும். இதனால் இந்நோய் அமைதியான கொலையாளி எனவும் அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோயால் தாக்கப்பட்டவர்கள் வேறு பாதிப்புக்களிற்கும் உள்ளாகின்றனர். நீரிழிவு நோயாளிகளில் 20க்கும் மேலானோர் சிறுநீரக நோயாலும், ஒவ்வொரு வருடமும் 2.5 மில்லியன் நோயாளிகள் பார்வைக் குறைபாட்டிற்கும் ஆளாகின்றனர். அத்தோடு வருடாந்தம் 1 மில்லியன் நோயாளிகள் அபயவங்களை இழக்கின்றனர்.
இதன் தாக்கம் நகர்ப்புறத்தில் 16.4 வீதமாகவும் கிராமப் புறத்தில் 8.7 வீதமாகவும் காணப்படுகிறது. அத்தோடு நாள் ஒன்றுக்கு 100 நபர் இருதய மற்றும் நீரிழிவு நோயால் இறக்கின்றனர்.
இலங்கையின் சனத்தொகையில் 10 பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றாத நோய்கள் பிரிவின் பணிப்பாளர், விசேட நிபுணர் தெரிவித்தார்.
உலகளாவிய ரீதியில் நீரிழுவு நோய் கட்டுப்படுத்தப்பட முடியாத ஒன்றாக மாறியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.
குருதியில் குளுகோசின் அளவு 126 மில்லிகிராமை விட அதிகரிக்கும் பட்சத்தில் அது நீரிழிவு நோயாக கருதப்படுவதாக அமைச்சின் தொற்றாத நோய்கள் பிரிவின் பணிப்பாளர் கூறினார்.
முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, சிகரெட் மற்றும் மதுபானங்கள் போன்றவற்றின் பாவனை என்பன நீரிழிவு நோய்க்கான காரணிகளாக அமைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அடிக்கடி தாகம் ஏற்படுதல், உடல் மெலிதல் மற்றும் இரவில் அதிகளவு சிறுநீர் கழித்தல் போன்றன நீரிழிவு நோய் தாக்கத்திற்கான அறிகுறிகள் என அவர் தெரிவித்தார்.
வயது,பால் வேறுபாடின்றித் தாக்கும் இந்நோய் விரைவான நகர மயமாக்கல்,ஆரோக்கியமற்ற வாழ்கை முறை, மன அழுத்தம், அதிக உடல் நிறை, புகைப் பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற காரணங்களால் விரைவில் பரவி வருகிறது.
பரிகாரம் இல்லாத இந்நோயிடமிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி உருவாக முன் தடுப்பது தான். இந் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு முறையில் கவனம் எடுக்க வேண்டியது கட்டாயம். மரக்கறி, பழவகை, மீன், கோழி இறைச்சி, கடலை பயறு, உழுந்து, குரக்கன், சிவப்பரிசி, ஆட்டாமா இவற்றை உட்கொள்வதோடு வீட்டில் சமைத்த உணவை உண்பது கட்டாயமானதொன்று.
சீனி, சக்கரை, தேன், வெல்லப்பாகு, கோதுமை மாவு அடங்கிய உணவு அரிசி மாவு அடங்கிய உணவு கொழுப்பு அடங்கிய உணவு என்பன உட்கொள்வதை தவிர்ப்பது அவசியம்.
மனஅழுத்தம் காரணமாகவும் இந்நோய் ஏற்படுவதால் இதற்கான தீர்வையும் பெற்றுக் கொள்வது அவசியம். பிரச்சனையை உறவினருடனோ அல்லது நண்பருடனோ பகிர்ந்து கொள்ளல் யோகாசனத்தில் ஈடுபடல் அத்தோடு முக்கியமானது எப்போதும் மகிழ்ச்சியாக இருத்தல் போன்றன மூலம் நீரிழிவு நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளமுடியும்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக