வியாழன், 12 நவம்பர், 2015

கஷ்டங்கள் போக்கும் சஷ்டி நல் விரதம்

(பொன்.டிமலேஷ்) 
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் தலை சிறந்த விரதம் கந்த சஷ்டி விரதம். வருடத்தில் 24 சஷ்டிகள் வருகின்றன. 24 சஷ்டிகளிலும் விரதமிருப்பது நல்லது. எனினும் ஐப்பசி மாத சஷ்டியே  கந்த சஷ்டியாகும். இதுவே சிறப்பானது. இவ்விரதம் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு (தீபாவளிக்கு) மறுநாள் பிரதமை, துவிதியை, த்ரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி என ஆறு நாட்கள் முருகப்பெருமானை நோக்கி நோற்கப்படுகின்றது. இது மகா சஷ்டி எனவும் அழைக்கப்படுகின்றது. இந்துமதத்திலே முருக வழிபாடு சிறப்பான ஒரு வழிபாடாகவும், முருகப்பெருமான் தனித்துவமிக்க ஒரு தெய்வமாகவும் வணங்கப்பட்டு வந்துள்ளமையை இந்துமத நூல்களினூடாக அறியமுடிகின்றது. 

படைத்தல் கடவுளையே சிறையிட்டு பரம்பொருளுக்கே குருவாக இருந்து பாடம் புகட்டிய குமரனல்லவா அந்த முருகன். அதனால்தான் அந்தக்குமரன் "சுவாமிநாதன் அல்லது சிவகுருநாதன்" என அழைக்கப்படுகின்றான். முருகன் வீரம் மிக்க தெய்வமாகவும், அழகுவாய்ந்த தெய்வமாகவும் வணங்கப்படுகின்றான். முருகன் - முருகு என்றால் அழகு என்பது பொருள்.

கந்த சஷ்டி விரதம் அதர்மத்தை/ஆணவத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதனை தத்துவார்த்தமாக விளக்குகின்றது. அதாவது இறைவனை நோக்கி தவமிருந்து தனது தவவலிமையினால் சாகாவரம்பெற்ற சூரபத்மன் எனும் அசுரன் தன் இஸ்டப்படி தேவர்களை துன்புறுத்தி தான் இன்புற்று வாழ்ந்துவந்தான். இதனால் துன்பமடைந்த தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட சிவன் தனது ஞானக்கண்ணாகிய நெற்றிக்கண்ணிலே இருந்து ஆறு தீப்பொறிகளை உருவாக்க அந்த தீப்பொறிகள் சரவணப்பொய்கையில் (இதனால் சரவணபவன் என அழைக்கப்பட்டான்) தாமரை மலர்களிலே வீழ்ந்து ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. இவ் ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப்பெண்கள் ஆறுபேர் வளர்த்து (இதனால் கார்த்திகேயன் என அழைக்கப்பட்டான்) உமையிடம் ஒப்படைக்க ஆறு குழந்தைகளும் ஆறுமுகத்துடன் ஓருருவாக ஆறுமுகனாக உருவெடுத்தன.

இந்த ஆறுமுகன் ஆணவம்கொண்ட அசுரனை அழிக்க ஆறுநாட்கள் கடும்போர் புரிந்து ஆறாவது நாள் சூரனை சங்காரம் செய்தான். அதாவது அனைத்திலும் 
தோற்ற சூரபத்மன் இறுதியாக மாமரமாக நின்று பொருதினான். அப்போது 
முருகப்பெருமான் சாகாவரம்பெற்ற அச்சூரபத்மனை அழிக்க தனது வேலினை செலுத்தியபோது அந்த மாமரம் இருகூறுகளாகி ஒன்று சேவலும், மற்றையது 
மயிலுமாக மாறின. அந்தவேளை முருகப்பெருமான் சேவலை தனது 
கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் ஏற்றுக்கொண்டார். அதாவது 
சூரபத்மனை அழித்த நாள்தான் சஷ்டி நாளாகும். 

இதைத்தான் எம்முன்னோர் "சங்கரன் பிள்ளை சட்டியில் மாவறுத்தான்" என்பார்கள். [சங்கரன் - சிவன், சட்டியில் - சஷ்டியில், மா -  மாமரம்(சூரபத்மன்), அறுத்தான் - அழித்தான்]

தத்துவம் 

முருகப்பெருமானுக்கும் ஆறு (6) என்ற எண்ணிற்கும் இடையே பல தொடர்புகள்  உள்ளதை காணமுடியும். அதாவது முருகப்பெருமானது திருமுகங்கள் 6. அவனை வளர்த்த கார்த்திகைப்பெண்கள் 6. முருகனது சரவணபவ என்ற சடாட்சர மந்திரம் 6 எழுத்து. அவனது திருத்தலம் 6 படை வீடுகள். முருகப்பெருமானது தோற்றத்தை கச்சியப்ப சிவாச்சியார் தனது கந்த 
புராணத்திலே பின்வருமாறு கூறுகின்றார்.அருவமும் உருவமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய் பிரமமாய் நின்ற சோதிபிளம்பது ஓர்மேனியாகில் கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பனிரெண்டும் கொண்டே ஒருதிரு முருகன் வந்தான் உதித்தனன் உலகம் உய்ய.

அதேபோன்று அருணகிரிநாதர் ஆறுமுகக் கோலத்தினை பின்வருமாறு 
பாடுகின்றார்.

ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்று
ஈசனுடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினைதீர்த்த முகம் ஒன்று
குன்றுருக வேல்வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறுபடா அசுரரை வதைத்த முகம் ஒன்று
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்று
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருளவேண்டும்
ஆதி அருணாசலமாய் அமர்ந்த பெருமாளே.

சிறப்பு

முருக விரதங்களிலே முக்கிய விரதமாக விளங்கும் கந்த சஷ்டி விரதம் பல 
சிறப்புக்களையும்கொண்ட விரதமாகும். அதாவது இவ்விரதத்தினை முறைப்படி அனுட்டித்தால் குழந்தைப்பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதைத்தான் எம்முன்னோர் "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்றனர். அதாவது சட்டியில் - சஷ்டித் திதியில், இருந்தால் - விரதமிருந்தால், அகப்பையில் - கருப்பையில், வரும் - கரு தோன்றும் என நம்பப்படுகின்றது. மேலும் இவ்விரதத்தினை நோற்பதன்மூலம் சிறந்த ஆயுள், ஆரோககியம், மகப்பேறு, மனப்பேறு, புகழ், நல்வாழ்வு, செல்வங்கள், நிம்மதி, சந்தோசம், உற்சாகம் என்பனபெற்று வாழ்வாங்கு வாழ்வர். 

விரத அனுட்டான முறை

இவ்விரதத்தை அனுட்டிப்பவர்கள் ஐப்பசி மாதத்தின் தீபாவளி அமாவாசைக்கு 
மறுநாள்வரும் பிரதமை அதிகாலை எழுந்து காலைக்கடன்களை முடித்து வடக்கு நோக்கி தண்ணீரில் அறுகோணம் வரைந்து அதன்மேல் சடாட்சர (சரவணபவ) மந்திரம் எழுதி இடையே பிரணவ (ஓம்) எழுதி அத்தண்ணீரை சிவகங்கையாக பாவனை செய்து அதில் மூழ்குதல்வேண்டும். பின்னர் தோய்த்துலர்ந்த ஆடை அணிந்து தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகனைப் பூஜித்து வணங்குதல்வேண்டும். விரதகாலங்களில் ஆலயங்களுக்குச் செல்லுதல், கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தர் கலிவெண்பா, கந்த புராணம், திருப்புகழ் போன்ற பாடல்களைப்பாடி முருகன் திருவுருவங்களை தியானம் செய்து முழுநாளும் இறை சிந்தனை உள்ளவர்களாக இருக்கவேண்டும். 

இவற்றைப்பாட முடியாதவர்கள் 
கந்தா சரணம், கதிர்வேலா சரணம், முருகா சரணம், வடிவேலா சரணம் 
என்ற நாமங்களை உச்சரிக்கவேண்டும். மேலும் விரதகாலங்களில் தகாத பேச்சுக்கள், பஞ்சமாபாதகங்கள், தாம்பத்திய உறவு போன்றவற்றை கட்டாயம் தவிர்க்கவேண்டும். இவ்வாறு ஆறு நாட்களும் கடைப்பிடித்து ஆறாவது நாள் உபவாசமிருந்து அன்றிரவு முழுவதும் விழித்திருந்து 1008 முருக திருநாமங்களை உச்சரித்து மறுநாள் சப்தமியன்று ஆறு அடியவர்களுக்கு அன்னமளித்து தாமும் உண்டு பாரணை செய்தல் வேண்டும். இவ்வாறு முறைப்படி இவ்விரதத்தினை அனுட்டித்து முருகப்பெருமானை வணங்கி எம் இஷ்ட சித்திகளைப்பெறுவோமாக.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate