மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் 10 பேர் இன்று காலை முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து வரும் கைதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்
பாராளுமன்ற உறுப்பினரிடம் பின்வரும் குற்றச்சாட்டுக்களை அரசியல் கைதிகள் முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய அரசாங்கம் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய தவறியுள்ளதாகவும் தற்போது அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்படவுள்ள 30 பேரும் அன்மைக்காலங்களில் கைதுசெய்யப்பட்டவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அவர்களுக்கு பிணை வழங்குவது வழமையான விடயம் என்றும் அதற்கும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் சம்பந்தமில்லையெனவும் மிக நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் இருக்கின்ற அரசியல் கைதிகள் குறித்து எதவித நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கத்தவறியுள்ளது என்றும் கூறியுள்ளனர்.
இதனால் தாங்கள் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் எமது கோரிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடித்தால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சிறைச்சாலைக்குச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரனிடம் தெரிவித்துள்ளனர்.
இதே நேரம் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் குறித்து எதிர்க்கட்சித்தலைவரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக கிழக்கு மாகாணசபையின் உதவி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக