ஞாயிறு, 27 டிசம்பர், 2015

காணிகள் ஆக்கிரமிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் சில நாட்களாக திட்டமிட்ட வகையில் வன இலாகாவுக்குரிய காணிகள் சில, அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடன் ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவற்றினை நிறுத்த உரிய  தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர், 'வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புனாணை கிழக்கு பகுதியிலும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாகனேரிப்பகுதியிலும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவலடி பகுதியிலும் வன இலாகாவுக்கு சொந்தமான பெருமளவான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இரவு வேளைகளில் பெருமளவு வாகனங்களில் செல்வோர் காடுகளில் மரங்களை வெட்டி இந்த காணி அபகரிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த மூன்று தினங்களாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் பொலிஸார் மற்றும் வன இலாகாவினருக்கு அறிவிக்கப்பட்டபோதிலும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். 

கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டதன் காரணமாக இன்று மாவட்டம் பெரும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளது. எனவே இவ்வாறான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இந்த செயற்பாட்டின் பின்னணியில் சில அரசியல்வாதிகளும் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்களுக்கிடையிலான விரிசல் நிலைகளையும் ஏற்படுத்தும் என்பதையும் உரியவர்கள் உணரவேண்டும். எனவே, அத்துமீறிய இந்த காணி அபகரிப்புகளை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதியின்; கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தார்.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624942

Translate