மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி - வேலூர் கிராம சேவை பிரிவில், கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக மன நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் வீதியில் அலைந்து திரிந்த பெண் ஒருவர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க அங்கொடை மனநல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக மனநிலை பாதிக்கப்பட்டு தனது வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் சுற்றித்திரிந்த மேற்படி பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் நோக்குடன், மட்டக்களப்பு - கல்லடி சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளரினால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டது.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய, மேற்படி பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான அனுமைதியை பெற்றுக்கொள்ளும் முகமாக மட்டக்களப்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் காத்தான்குடி பொலிஸார், அப்பெண்ணை முன்னிலைப்படுத்தினர். இதன்போதே, அப்பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக அவரை அங்கொடை மனநல வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பொலிஸாருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், குறித்த பெண்ணை மனநல வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்லடி சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் டி.பிரான்சிஸ் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக