
கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமாகி கல்முனை மாநகர சபை முன்றலில் மகஜர் கையளிப்போடு முடிவடைந்தது.
அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கமும், விவசாயிகள் அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் உத்தேச புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தினால் பாதிக்கப்படக் கூடிய பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
´வாழ்வாதாரத் திட்டங்களை அழிக்கும் புதிய நகர மயமாக்கல் திட்டத்தை எதிர்க்கிறோம்´ என எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு ஆர்பாட்டம் இடம்பெற்றது.
´இத்திட்டம் இங்கு வாழும் மூவின மக்களிடையே சமூக கலாச்சார பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும், விவசாயத்தை நாசம் செய்யும், அரிய வகை மீனினங்கள், பறவைகள், உயிர்ப் பல்வகைத் தன்மை அழிந்து போகும், பாரிய வரலாற்றுக் கிராமமான துரவேந்தியமடு கிராமம் அழிந்து போகும், 1059 குடும்பங்களைச் சேர்ந்த நன்னீர் மீனவர்களது வாழ்க்கை கேள்விக் குறியாகும்´ போன்ற விடயங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுப் பிரசுரமாக விநியோகித்தனர்.
தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஆர்ப்பாட்ட ஏற்பாட்டுக் குழுவினர் கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர் முஹம்மத் கனி, மற்றும் கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலாளர் ஏ. லவநாதன், கல்முனை மாநகர சபை தலைமை இலிகிதர் நளீம்.எம்.பதூர்தீன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மாகாண சபை உறுப்பினர் ரீ. கலையரசன், டெலோ இயக்க பொதுச் செயலாளர் ஹென்றி மஹேந்திரன் ஆகியோரிடம் கையளித்தனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக