மட்டக்களப்பு, மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்டுவரும் கழிவுகள் அகற்றும் செயற்பாடு, இன்று புதன்கிழமையிலிருந்து (23) 15 நாட்களுக்கு இடம்பெறாது என மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி யாகேஸ்வரி வசந்தகுமாரன், பிரதேச பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் நேற்று செவ்வாய்க்கிழமை (22) மாலை பொது அறிவித்தல் விடுத்துள்ளார்.
இப்பிரதேசத்தில் சேகரிக்கப்பட்டுவரும் கழிவுகள், களுதாவளை கடற்கரைப் பகுதியில் கொட்டப்பட்டு வருவதனால் அவ்விடத்தில் இன்றிலிருந்து கழிவுகள் கொட்டப்படமாட்டாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகத்தின் செயலாளர், எம்.கோபாலரெத்தினம், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் நந்தலால், மற்றும் களுதாவளைக் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியோர் இணைந்து பிரதேச சபைக் காரியாலத்தில் இத்தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
எனவே, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகத்தின் செயலாளர், எம்.கோபாலரெத்தினத்தினால் கழிவுகள் கொட்டுவதற்குரிய இடம் அடையாளப்படுத்தித் தரப்பட்ட பின்னர் வழமையான கழிவகற்றும் செயற்பாடுகள் தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக