தற்போதைய காலக்கட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றீடாக எந்த அமைப்புகளைஉருவாக்கினாலும் அது கிழக்கு மாகாணத்திற்கு சாபக்கேடே என தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.
அம்பிளாந்தறையில் உள்ள தமது அலுவலகத்தில் 26 மாலை தற்போதைய புதியமைப்பு யாழ்பாணத்தில் உருவாக்கப்பட்டமை சம்பந்தமாக ஆதரவாளர்கள் மத்தியில் பேசியபோது மேலும் கூறிய அவர். தற்போதைய நிலையில் ஒவ்வொரு தமிழ்மகனும் தமிழ்தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமே தவிர பலவீனப்படுத்தகூடாது.
தேர்தலில் இம்முறை நான் வெற்றிபெறவில்லை என்பதற்காக அல்லது தேசியபட்டியல் உறுப்புரிமை எனக்கு தரவில்லை என்பதற்காக அல்லது ஒருவர் இருவர்முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதற்காக நான் வேறு அமைப்புக்களில் இணைவதோ அல்லது தமிழ்தேசியகூட்டமைப்புக்கு எதிராகசெயல்படுவதோ எனது நோக்கமில்லை.
குறிப்பாக கிழக்கு மாகாணமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வேலைவாய்ப்பில் தமிழர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள். தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 75வீதமான தமிழர்கள் நிறைந்த மாவட்டத்தில் மாவட்ட இணைத்தலைவராக மூன்று முஸ்லிம் உறுப்பினர்களும் ஒரு தமிழரும் நியமிக்கப்பட்ட நிலையில் இன்னும் பல ஆபத்துக்களை எதிர்நோக்க வேண்டி வரும்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுக்கும் அரசியல் தீர்வு விடயத்திற்கு குறிப்பாக கிழக்கில்உள்ள அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும்.அதை விடுத்து இன்னும் ஒரு மாற்றுத்தலைமைக்கு பின்னால் செல்வது கிழக்குத்தமிழர்களாகிய நாம் எமது தலையில் நாமே மண்ணை போடுவதற்கு ஒப்பாகும். வடமாகாணத்தை பொறுத்த மட்டில் இன்னும்பத்து வருடம் அரசியல் தீர்வு இல்லாமல் இப்படியே இருந்தாலும் அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை.
இதனால் யாரும் நான் பிரதேச வாதம் பேசுவதாக நினைத்தால் அது அவர்கள் மடமைத் தனமும் கிழக்கு மாகாணம் தொடர்பான சரியான விளக்கம் இல்லாதவர்களேயாகும்.கடந்த முப்பதுவருட அகிம்சைப் போராட்டகால அரசியலை தலைமையேற்றுநடாத்தியதந்தை செல்வாவாக இருக்கலாம் அதன்பின் ஆயுத அரசியல் போராட்டத்தை முப்பது வருடம் தலைமையேற்று வழிநடாத்திய பிரபாகரனாக இருக்கலாம் பல கட்டங்களில் அவர்களுக்கு கிழக்கு மாகாணத்தை விட்டு வடமாகாணத்தை மட்டும் எடுத்து தனியாக ஆட்சி செய்யுமாறு அந்தந்த காலக்கட்டங்களில் இருந்த சிங்கள தலைவர்கள் கேட்டபோதும் தாம்கிழக்கு மாகாணத்தை விட்டு எந்த தீர்வையும் பெறமாட்டோம் என உறுதியாக கூறி இருந்தனர். எப்போதும் வடக்கில் இருந்து கிழக்கு மாகாணம் பிரியக்கூடாது என்ற நிலைப்பாட்டின்
அடிப்படையில்தான் எமது தலைவர்கள் செயல்பட்டனர். தற்போது இராஜதந்திர அரசியல் தலைமையை ஏற்றுள்ள சம்பந்தன்ஐயாவும் வட, கிழக்கு இணைந்த அரசியல் தீர்வில் இருந்து தடம்மாறவில்லை. எதிர்வரும் 2016ம் ஆண்டு டிசம்பர் 31க்குள் அரசியல் தீர்வு கிடைக்கும் என உறுதியுடன் தமது செயல்பாட்டை முன் எடுக்கும்போது அதற்கு மாற்றீடாக வேறு ஒரு பெயரில் அமைப்புக்கள் ஏற்படுத்துவது இன்னும் காலத்தை இழுத்தடிக்குமே தவிர அதனால் அடையும் லாபம் அரசாங்கத்திற்கு லாபமாகமட்டும் இருக்கும். எமக்கு எந்த நன்மையும் ஏற்படாது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக