செவ்வாய், 22 டிசம்பர், 2015

கட்டார் நாட்டிற்கு சென்று திரும்பியவரை காணவில்லை!

கட்டார் நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்று புத்தி சுவாதீனம் காரணமாக அங்கிருந்து திருப்பியனுப்பப்பட்ட தனது மகனைக் காணவில்லை என மட்டக்களப்பு வவுணதீவைச் சேர்ந்த சாமித்தம்பி நவரெட்ணம் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

கடந்த 12ம் திகதி தனது மகன் நவரெட்ணம் குணராஜா கட்டாரிலிருந்து நாட்டுக்கு வந்ததாகவும், அதிகாலை வேளை வந்திறங்கிய இவர், அவருடன் வந்த நண்பரை விட்டு விலகி வெளியே சென்றுள்ளதாகவும் தெரிவிக்கும் நவரெட்ணம், விமான நிலையத்திலுள்ள அதிகாரிகளிடம் விசாரித்ததாகவும், அவர்கள் தன்னுடைய மகன் வெளியேறிச் சென்றுள்ளதாக வீடியோ ஆதாரங்கள் மூலம் தெரிவதாகவும், பொலிஸில் முறைப்பாடு செய்து தேடும் படியும் கூறியதாக தெரிவித்தார். 

கடந்த ஒக்ரோபர் இறுதி வாரத்தில் கட்டாருக்கு சுத்திகரிப்பாளர் தொழிலுக்காக இங்கிருந்து சென்ற என்னுடைய மகன் புத்தி சுவாதீனமாகியுள்ளதாகவும் அவர் திருப்ப அனுப்பப்படவுள்ளதாகவும் அவருடைய நண்பர் மூலம் அறிந்தேன்.
அதன் பின்னர் கடந்த கடந்த வெள்ளிக்கிழமை மாலை எனக்கு அவர் தொலைபேசியில் அழைத்து என்னுடைய மகன் திரும்பி வருவதாகத் தெரிவித்தார்.


நான் அன்றிரவு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கே விமான நிலையம் செல்ல முடிந்தது. அப்போது என்னுடைய மகன் வந்து வெளியேறி விட்டார். நண்பரைச் சந்தித்தேன்.


அதன் பின்னர் விமான நிலையப் பொலிசார், அதிகாரிகளிடம் விசாரித்த போது ஏதும் பயனில்லாமல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன்.


பின்னர் வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கும் அறிவித்தேன். இருந்த போதும் என்னுடைய மகன் இதுவரையில் கிடைக்கவில்லை.


எனவே கொழும்பிலோ வேறு எங்காவது என்னுடைய மகனைக் கண்டால் எனக்கு என்னுடைய 0779424185 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ, பொலிஸ் நிலையத்துக்கோ அறிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். 

கூலித் தொழில் செய்யும் நான் என்னுடைய குடும்ப நிலைமை காரணமாகவே மகனை வெளிநாட்டுக்குத் தொழிலுக்காக அனுப்பினேன் என்று தெரிவித்தார்.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624937

Translate