செவ்வாய், 3 நவம்பர், 2015

அரசின் தந்திரத்தாலேயே முஸ்லீம்கள் வெளியேற வேண்டி வந்தது: அரியநேத்திரன்

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு தமிழர்கள் யாரும் வெட்கி தலைக்குனிய தேவையில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை (01.11.2015) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நண்பர் சுமந்திரன் கூறிய கருத்தானது அவரின் சொந்த கருத்தே தவிர அது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தல்ல, கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு அவரின் கருத்தை சிலர் ஏற்றுக்கொள்ளலாம் பலர் ஏற்காமலும் விடலாம்.
எனது கருத்து யாழ் முஸ்லிம் மக்களை விடுதலைப்புலிகள் இனசுத்திகரிப்பு செய்யவில்லை இனபாதுகாப்புக்காகவே அவர்கள் பாதுகாப்பாக எந்த தாக்குதலும் இல்லாமல் வெளியேற்றப்பட்டார்கள். யாழ்பாணத்தில் இவ்வாறு வெளியேற்றப்படுவதற்கான காரணத்தை ஒவ்வொருவரும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த 1990ம் ஆண்டு பல்வேறு இனப்படுகொலைகள் இடம்பெற்றன இந்த இனப்படுகொலைகளுக்கு அப்போதைய, பிரேமதாச ஐனாதிபதியாகவும், டி.பி.விஐயதுங்கா பிரதமராகவும் கொண்ட ஐக்கிய தேசியகட்சி அரசாங்கம் கிழக்கில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை ஊர்காவல் படையில் உள்வாங்கி அவர்களுக்கு பயிற்சி கொடுத்து கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பலநூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்களை முஸ்லிம் ஊர்காவல்படையினர் கொலை செய்தனர்.
கடந்த 20/06/1990 வளத்தாபிட்டி படு கொலை, 29/06/1990 வீரச்சோலை படுகொலை, 09/07/1990 மல்லிகைத்தீவு படுகொலை, 08/07/1990 சவளக்கடை படுகொலை, 12/08/1990 வீரமுனைபடு கொலை, 09/08/1990 சத்துருக்கொண்டான் படுகொலை, 05/09/1990 வந்தாறுமூலைப்படுகொலை, 21/09/1990 புதிர் குடியிருப்பு படுகொலை இவைகளுக்கு அப்பால் 1990ல் அம்பாறை தம்பட்டை தொடக்கம் மட்டக்களப்பு வாழைச்சேனைவரை பிரதான வீதியை அண்டிய பல தமிழ் கிராமங்களில் நடந்த படுகொலை சம்பவத்தில் டயர் போட்டு எரித்த சம்பவங்கள் அனைத்திலும் இலங்கை படைகளுடன் முஸ்லிம் ஊர்காவல் படையும் பிரேமதாச அரசால் உருவாக்கப்பட்ட பச்சைப்புலிகள்(கொலகொட்டியா) என்ற விசேட படையிலும் சிங்கள இளைஞர்களுடன் முஸ்லிம் இளைஞர்களும் இணைந்திருந்தனர்.
இவைகள் ஒருபுறம் நடக்க மறுபுறம் ஓட்டமாவடியில் இருந்த இந்து ஆலயம் உடைக்கப்பட்டு அவ்விடத்தில் மாட்டிறைச்சிக்கடை கட்டப்பட்டதும், கல்முனை தரவைபிள்ளையார் ஆலயம், சாய்ந்தமருது விஷ்னு ஆலயம், சாய்ந்தமருது பிள்ளையார்கோயில், சாய்ந்தமருது அரசடிவிநாயகர் ஆலயம், நிந்தவூர் காளிகோயில், நிந்தவூர் முருகன்கோயில், மீனோடைக்கட்டுபிள்ளையார் கோயில்,கல்முனை கண்ணகை அம்மன் ஆலயம், என்பன முஸ்லிம்களால் அழிக்கப்பட்டதும் வரலாறாகும்.
அப்போதைய பிரேமதாசா அரசு தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாளும் தந்திரத்திலும் முஸ்லிம் இளைஞர்களை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேராமல் தடுப்பதற்காகவும் இந்த தந்திரோபாயத்தை செய்தது உண்மையில் பிரேமதாச இதில் வெற்றி கண்டார். இவ்வாறான நடவடிக்கைதான் விடுதலைப்புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைக்கை வழிகோரியது அதனால் துரதிஷ்டவசமான கொலை சம்பவங்கள் காத்தான்குடி ஏறாவூர் பள்ளிவாசல்களில் இடம்பெற்றன.
இந்தநிலையில் இவ்வாறான சம்பவங்கள் யாழ்பாணத்திலும் நடக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே தான் விடுதலைப்புலிகள் யாழ் முஸ்லிம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர் இதை இனசுத்திகரிப்பாக பார்கமுடியாது இனபாதுகாப்பாகவே பார்க வேண்டும்.
இனசுத்திகரிப்பு எனில் யாழ் முஸ்லிம் மக்களை வெளியேற்றாமல் ஒட்டுமொத்த மக்களையும் புலிகள் கொலை செய்திருப்பார்களானால் அது இனசுத்திகரிப்பு என கூறுவதில் நியாயம் இருக்கும். தமிழ் முஸ்லிம் மக்களின் வரலாற்று உறவை திட்டமிட்டு பிரிந்தவர்கள் தமிழரோ அன்றி முஸ்லிம் மக்களோ இல்லை மாறி மாறி ஆட்சிசெய்த அரசாங்கங்களே என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் ஏந்தி போராடிய வரலாறு உண்டு அவர்களில் பல மாவீர்ர்கள் உண்டு என்பதையும் கூறுவதில் பெருமை அடைகிறேன். எனவே யாழ் முஸ்லிம் மக்கள் வெளியேறப்பட்டமைக்கான அடிப்படை காரணம் 1990ம் ஆண்டு ஆட்சி செய்த ஐக்கிய தேசிய கட்சி அரசின் பிரித்தாளும் தந்திரத்தின் சதியே என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
இதற்காக எந்த தமிழரும் வெட்கித்தலை குனிய தேவையில்லை அதற்கான எந்த தீர்மானங்களும் வடமாகாணசபையிலோ கிழக்குமாகாண சபையிலோ நிறை வேற்றத் தேவையில்லை. எனவும் தெரிவித்துள்ளார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate