கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் 100 வைத்தியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயத்தை மேற்கொண்டு அங்கு நிலவுகின்ற குறைபாடுகளை கேட்டறிந்த பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், 'ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை எனக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியைத் தந்து அந்த அமைச்சினூடாக நான் என்னென்ன அபிவிருத்திகளை கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கு செய்து வருகின்றேன் எனவும் அதனூடாக மாகாணத்திலுள்ள மூவின மக்களுக்கும் எனது அபிவிருத்திப் பணிகள் சரிவர முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவா எனவும் கட்சியும் கட்சியின் தலைமையும் மு.காவின் உயர்பீட உறுப்பினர்களும் அவதானித்து வருகின்றனர்.
நான் இந்த அமைச்சர் பதவியில் இருக்கும் காலம்வரை எனது கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் எவ்வித பங்கமும் வராதவாறு எனது அபிவிருத்திப் பணிகளை நான் சரிவர முன்னெடுத்து வருவேன்' என்றார். மேலும், 'காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிரின் கோரிக்கைகளுக்கமைய எதிர்வரும் ஆண்டில் இவ்வைத்தியசாலைக்கு மகப்பேற்று நிபுணர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுப்பதுடன்,பற் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான புதிய உபகரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.
இதேவேளை, இங்கு நிலவுகின்ற ஆளணி பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கான முன்னெடுப்புக்களையும் மேற்கொள்வேன்' எனவும் அவர் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக