மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளில் பல உணவு விடுதிகள் வியாபாரநிலையங்கள் வெதுப்பகங்கள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பில் உள்ள பல உணவு தயாரிக்கும் நிலையங்கள் பல்வேறுபட்ட சுகாதார சீர்கேட்டினை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. மனிதர்களினால் நினைத்துப்பார்க்க முடியாத அளவிலான சுகாதார சீர்கேட்டினை கொண்டுள்ள இந்த உணவு தயாரிக்கும் நிலையங்களினால் பல்வேறுபட்ட நோய்த்தாக்கங்கள் ஏற்படக் கூடிய அபாயங்கள் உள்ளது. எனவே இதுகுறித்து கவனம் செலுத்தவேண்டியது ஒவ்வொரு பொதுமகனின் கடமையாகும்.
மனிதர்கள் அன்றாடம் தங்களது பசியை போக்குவதற்காக பணத்தினை செலவு செய்து உணவினை சாப்பிடுவதற்காக செல்லும் உணவு விடுதிகள் மற்றும் வெதுப்பகங்கள் என்பன முன்புறம் மிகவும் சுகாதாரமாக காட்சியளித்தாலும் குறித்த உணவகங்களின் பின்புறங்கள் மனித நடமாட்டத்திற்கே ஒவ்வாத நிலையில் உள்ளதுடன் அதில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் மிகவும் சுகாதார சீர்கேடான நிலையில் காணப்படுகின்றனர்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல உணவு விடுதிகளை முற்றுகையிட்ட சுகாதார பரிசோதகர் குழுக்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும் போது நாம் அன்றாடம் சாப்பிடுகின்ற உணவு விடுதிகளின் தரம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றது. முன்புறமாக மிகவும் சுத்தமாக காணப்படும் உணவு நிலையங்கள் பின்புறம் எவ்வாறான நிலையில் உள்ளது என்பதை பரிசோதிக்க வேண்டிய தேவை அனைவருக்கும் எழுந்துள்ளது. அதாவது ஒரு உணவு விடுதியில் தினமும் உணவு உண்ணுகின்ற வாடிக்கையாளர்கள் அந்த உணவு விடுதியின் சுகாதரம் குறித்து கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகவுள்ளது.
எனவே இனி வரும் காலங்களில் உணவு விடுதிகளில் உணவு உண்ண செல்கின்றவர்கள் சுகாதாரம் குறித்து கவனம் செலுத்துமாறு வேண்டப்படுகின்றீர்கள். அத்துடன் மட்டக்களப்பில் சுகாதார சீர்கேடாக காணப்படும் உணவு விடுதிகள் குறித்தும் தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள் குறித்தும் பழுதடைந்த மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள் குறித்தும் பிரதேச சுகாதார பரிசோதகர்களிடம் அறிவிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்தமாதம் மேற்கொள்ளப்பட்ட சுத்தமான உணவினை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையிலான நடவடிக்கைகளின் போது உணவு விடுதிகள் மற்றும் வர்த்த நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அனுமதியின்றி சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட பெருமளவான குடிபானங்கள் மற்றும் சுகாதாரத்துக்கு கேடான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு கல்லடி பொதுச்சுகாதார பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது வெளிநாடுகளில் இருந்து அனுமதியின்றி சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு விற்பனை செய்த பெருமளவான குளிர்பானங்கள் மீட்கப்பட்டிருந்தன.
கடந்த மாதம் மட்டும் மட்டக்களப்பில் சுமார் 10க்கும் மேற்பட்ட உணவு விடுதிகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளன எனவே உணவு நிலையங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு சுகாதாரபரிசோதகர்கள் அறிவித்துள்ளனர்.










0 facebook-blogger:
கருத்துரையிடுக